பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, இறந்த சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனை முழுவதும் சுற்றி திரிந்த தாய்!

கடலூரில் உயிரிழந்த நான்கு வயது பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்தபடி தாய் ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடலூரைச் சேர்ந்த பாலமுருகன்-பச்சையம்மாள் என்ற தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொன்னதால் பச்சையம்மாளின் உறவினர் ஜீவா என்பவர் பச்சையம்மாள் மற்றும் மூன்று குழந்தைகளை தான் பார்த்துக் கொள்வதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டிவனம் அழைத்துச் சென்றுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள ஜீவாவின் வீட்டில் பச்சையம்மாள் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகனின் உறவினருக்கு போன் செய்த பச்சையம்மாள், நான்கு வயது பெண் குழந்தை இறந்துவிட்டது. நாங்கள் அனைவரும் கடலூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகனின் உறவினர்கள் நேற்று இரவு முழுக்க கடலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
ஆனால் யாரும் வரவில்லை. இதனால் கடலூரின் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்பொழுது உழவர் சந்தை அருகே இறந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு பச்சையம்மாளும் மற்ற இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டது.
பச்சையம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜீவா தான் குழந்தையை கொலை செய்திருக்க வேண்டும் என பாலமுருகனின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே இந்த சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மூன்று வயது குழந்தையின் பிரேதப் பரிசோதனை விழுப்புரம் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் குழந்தை கடுமையான பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய பொழுது திருவண்ணாமலை அருகே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜீவா என்ற நபர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் கைது செய்து நேற்று இரவு ஜீவாவை கடலூர் கொண்டு வந்தனர். கொண்டு வரும் வழியில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றதில் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையானது சுமார் ஒருவார காலத்திற்கு தொடர்ந்து பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
