மருத்துவரா அல்லது மேஜிக் மேனா விறுவிறுப்பில் மெர்சல் விமர்சனம்!

கதையின் நாயகர்களுக்கு தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதைத் தாண்டியும் சில லட்சியங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரே வித்தியாசம்.
படம் தொடங்கும்போது, சிலர் கடத்தப்படுகிறார்கள். ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்யும் மாறன் (விஜய்), விருது ஒன்றைப் பெற வெளிநாட்டுக்குச் செல்லும்போது, மிகப் பெரிய மருத்துவரான அர்ஜுன் சக்காரியா (ஹரீஷ் பெராடி) ஒரு மேஜிக் ஷோவில் கொல்லப்படுகிறார்.
முன்னதாகக் கடத்தப்பட்டவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். மாறனைக் கைதுசெய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை.
அப்போதுதான், இந்த சம்பவங்களில் ஈடுபட்டது, மருத்துவர் மாறன் அல்ல, அவரைப் போலவே இருக்கும் வெற்றி (விஜய்) என்பது தெரியவருகிறது.
வில்லன்களால் கொல்லப்படும் தந்தை, ஆள் மாறாட்டம் செய்து பழிவாங்கும் மகன்கள் என்பது போன்ற கதையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் தனித்துத் தெரிவது மருத்துவத் துறையை களமாகத் தேர்வுசெய்திருப்பதுதான்.
பொது மருத்துவ வசதி, பெரிய மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் போன்றவற்றை கதையின் ஊடாக தொட்டுக்காட்டுகிறார் விஜய். இது தொடர்பான வசனங்களுக்கு திரையரங்குகளில் பெரும் வரவேற்பும் கிடைக்கிறது.
காவல்துறை வெற்றியைத் தேடும் அதே நேரம், மிகப் பெரிய மருத்துவக் குழுமத்தின் தலைவரான டேனியல் ஆரோக்கியராஜும் (எஸ்.ஜே. சூர்யா) வெற்றியைத் தேடுகிறார். இந்தக் கொலைகளுக்கு என்ன காரணம், மாறனும் வெற்றியும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள், டேனியல் ஏன் வெற்றியைத் தேடுகிறான் என்பது மீதிக் கதை.
வடிவேலுவுக்கு இந்தப் படத்தில் கேரக்டர் ரோல். விஜய் - வடிவேலுவின் அதகள காம்போவைப் பார்த்து ரசித்திருக்கும் நமக்கு இது சற்று ஏமாற்றமே. ஆனாலும், 'சீலாக்கி டும்' என அவ்வப்போது தனது இங்க்லீஷ் பேசுற ஸ்டைல் மூலம் தனது ரீ-என்ட்ரியை பதிவு செய்கிறார். சிறுவயது வடிவேலுவாக நடிக்க அச்சு அசலாக அப்படியே ஒரு பையனைப் பிடித்திருக்கிறார்கள். சிறுவயது விஜய்யாக நடித்த குட்டிப் பையனும் நித்யா மேனன் போலவே பப்ளி க்யூட்.
ஆட்கடத்தல், வெளிநாட்டில் விறுவிறுப்பான காட்சிகள், இரண்டு நாயகர்கள், நாயகிகளின் அறிமுகம் என முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குனர், இரண்டாவது பாதியில் பெரும் சோர்வை ஏற்படுத்துகிறார்.
மதுரையில் நடப்பதாகச் சொல்லப்படும் வெற்றிமாறனின் கதையில் வரும் நித்யா மேனன் வசீகரித்தாலும், ரொம்பவுமே நீளமாக இருப்பதால் பெரும் சோர்வை ஏற்படுத்துகிறது.
வெற்றி மாறன் பாத்திரத்தில் மட்டும் முந்தைய இரு பாத்திரங்களில் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கிறார் விஜய்.
மூன்று கதாநாயகிகள், இரண்டு வில்லன்கள், நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படத்தை முழுக்க முழுக்க விஜய்யே காப்பாற்றுகிறார். சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் ரசிகர்களை குதூகலிக்கவைக்கின்றன.
காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என படத்தில் மூன்று நாயகிகள். அதில் வெற்றி மாறனின் மனைவியாக வரும் நித்யா மேனனுக்கு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. காஜல் அகர்வால் இரண்டு காட்சிகளிலும் ஒரு பாடலிலும் வந்துவிட்டுப் போகிறார். சமந்தா, "தம்பி, ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன், வாரியா" என்று கொஞ்சலுடன் கேட்டு சில காட்சிகளில் மட்டும் வசீகரிக்கிறார்.
ஸ்பைடர் படத்தில் வில்லனாக அசரவைத்த எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்திலும் வில்லனாக வந்து கலகலப்பூட்டுகிறார். சத்யராஜுக்கும் கோவை சரளாவுக்கும் மேலும் ஒரு படம்.
'ஆளப்போறான் தமிழன்' பாடல், எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸ், மருத்துவத்துறை வியாபாரமாவதற்கு எதிராகப் பேசிய புள்ளிவிபர வசனங்கள், இலவச டி.வி, க்ரைண்டர், மிக்ஸி எல்லாம் இலவசமா கொடுக்குற ஊர் இது... மருத்துவ வசதிகளை இலவசமா கொடுக்க முடியாதா' என எகத்தாள பஞ்ச் பேசுவது, படத்தின் டைட்டில் கார்டு போடும்போது, தலைமைச் செயலக மாதிரிக் கட்டிடத்திற்குள் விஜய் நுழைவது என அரசியல் என்ட்ரியை குறியீடாகவே காட்டியிருக்கிறார்கள். இது ரசிகர்களின் ஆரவாரத்திற்காக மட்டும்தானா அல்லது அவர்களின் பொலிடிக்கல் பல்ஸ் பிடிக்கவா என்பது தளபதிக்கு மட்டுமே வெளிச்சம்.
டிஜிட்டல் இந்தியாவுல எங்க பணம் எல்லாம் க்யூவ் தான்’, ’ஒருவேளை இந்த ஐநூறு ரூபாய் நோட்டும் செல்லாதுன்னு சொல்லிட்டங்களா’, ‘மிக்சி, கிரைண்டர் இலவசமா குடுத்த நாட்டுல மருத்துவத்தை இலவசமா குடுக்க முடியாதா? ,ஜிஎஸ்டி குறித்த பேச்சு என சமகால அரசியலை வசங்களில் பேசியிருப்பதன் மூலம் வெகுவாக ரசிகர்களை கவந்திருக்கிறார் அட்லி.
விஜய் + ஏ.ஆர்.ரஹ்மான் என்பது எப்போதுமே சற்று குழப்பமான கூட்டணி. ரஹ்மான் தனது தரத்தையும் பேண வேண்டும், அதேசமயத்தில் வெகுஊன பாணிக்கும் இறங்கி அடிக்க வேண்டும். சகிப்புத்தன்மையோடு ரஹ்மான் இரண்டையும் செய்திருக்கிறார். “நீதானே” என்பது நல்ல மெலடி. நன்றாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் பின்னணி இசையில் அவர் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதை இந்தத் திரைப்படமும் நிரூபிக்கிறது.
ஜி.கே.விஷ்ணு (ஒளிப்பதிவு), அனல் அரசு (சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு), ரூபன் (எடிட்டிங்) போன்ற கலைஞர்களின் அசாதாரணமான உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆனால், ஒரு வணிக மசாலா திரைப்படத்தில், அவர்களால் இதைத்தானே செய்ய முடியும் என்கிற சோர்வும் தோன்றுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமெர்சலுக்கு மெர்சலாக பெருகிவருகிற மறைமுக ஆதரவு!
Next Postசென்னையில் ஒரு நாள் 2 - விமர்சனம்:
