Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம்' என்று உரைத்த கலைஞரின் மகன் நான்: முதலமைச்சர் மு க ஸ்டாலின்!

On July 16, 2025
n6728250951752689695532112bf3beff61890530bc36483e9b13c26c19d476dcfc524ee912bfb010c5cafd
Share

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றுகையில்:

தேர்தலுக்கு முன்பே ஊர் ஊராகச் சென்று ஒரு பெட்ஷீட்டை போட்டு, உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின் அதெல்லாம் என்னானது?" என்று அதிமேதாவி மாதிரி பேசுகிறார்.

சொல்கிறேன் - பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்செல் ஷீட்களாக மாற்றி, ஒர்க் ஷீட்டாக மாற்றி தீர்வு கண்டிருக்கிறோம். அது தெரியாமல் நான்கு வருடமாக குடும்பத்தோடு ஸ்டாலின் இருந்தார் என்று சொல்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டு மக்கள் தான் என்றும் அவர்களோடுதான் இருப்பேன், இருப்பேன், இருக்கிறேன், இருந்தே தீருவேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுடைய ஸ்டாலின் பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்காக வீடு, வீடாக செல்கிறோம் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திலேயே விசாரித்து பார்க்கட்டும்.

கட்சி பேதம் பார்க்காமல், தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சிதான், இந்த ஸ்டாலின் ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும், அ.தி.மு.க. குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கும் சென்றடைகிறது. மறுக்க முடியுமா? அ.தி.மு.க. ஆட்சி செய்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டு நிர்வாகத்தை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருந்தார்கள். அதை சரி செய்து ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்தேன். தி.மு.க.வால் ஆயிரம் ரூபாய் தர முடியாது. அந்த ஆட்சி வந்தாலும் தரமுடியாது என்று அப்போதும் சொன்னார். ஆட்சிக்கு வந்தபிறகும் சொல்கிறார். அவர் அவதூறைப் பரப்பினார். நான் சொன்னேன் - சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று நம்முடைய நெஞ்சில் வாழக்கூடிய கலைஞரின் மகன் நான். அதை உறுதியாக சொன்னோம், சொன்னபடி கொடுத்து வருகிறோம். மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை சரியாக வங்கி கணக்கில் விழுகிறது. தேதி மாறாமல், நாள் தவறாமல் சரியாக வந்து கொண்டிருக்கிறது.


பத்து தோல்வி பழனிசாமி அவர்களே... 2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லப் போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்பப் போவதில்லை. அட… ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்பத் தயாராக இல்லை. ஒரு திரைப்பட காமெடியில் வரும் - "அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா" அதுபோல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதை தெரிந்துகொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க ஒரு படத்தின் பெயர் உங்களுக்கு தெரியும் - 'சுந்தரா டிராவல்ஸ்' மாதிரி ஒரு பஸ் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டார். அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது மாதிரி இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும் அவதூறுமாக வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.


விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், தமிழ்நாட்டு மக்களான உங்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கிறார். உங்களை கொச்சைப்படுத்துகிறார். என்னவென்றால், ஆயிரம் ரூபாய்க்காக ஏமாந்துவிட்டீர்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் தாய்மார்களை பார்த்து பேசுகிறார். மக்கள் ஏமாறவில்லை, பா.ஜ.க.வை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போயிருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டிலிருந்து காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க.வையே டெல்லிக்குச் சென்று அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். மூன்று கார்... நான்கு கார் என்று மாறி அமித்ஷா வீட்டுக் கதவை தட்டிய கதையைப் பற்றி தம்பி உதயநிதி தான் முதன்முதலில் பேசினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அமித்ஷா-வின் வீட்டுக் கதவை தட்டினால் என்ன தப்பு? என்று வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள்? யாருக்காக தட்டினீர்கள்? உங்கள் குடும்பத்தை ரெய்டிலிருந்து காப்பாற்ற - உங்கள் கட்சியையே அடமானம் வைக்கத்தானே தட்டினீர்கள்?

தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஏமாறத் தயாராக இல்லை

பா.ஜ.க. கூட்டணியால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தோற்றுப் போனோம் என்று நீங்களும் சொன்னீர்கள் - உங்கள் கட்சிக்காரர்களே வெளிப்படையாக சொன்ன பிறகும், அதே கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே. அதற்குப் பெயர்தான் குடும்பப் பாசமா. உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியையே டெல்லியோடு சதுரங்க வேட்டையில் சிக்கி அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்களை சொந்த கட்சிக்காரர்களே நம்பாத நிலையில், தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஏமாறத் தயாராக இல்லை.

மக்களைப் பொறுத்தவரைக்கும், ஸ்டாலின் கையில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் - சுயநலத்திற்காக எந்த அந்நிய சக்தியையும் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்குள் விடமாட்டார், தடுத்து நிறுத்துவார் என்று நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்கள். அந்த எதிர்பார்ப்பை நம்பிக்கையை - உண்மையாக உழைத்து இந்த நான்காண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். வளர்ச்சியில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்று உங்கள் ஓனரான ஒன்றிய பா.ஜ.க. அரசே சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை நாங்கள் உயர்த்தி காட்டியிருக்கிறோம்! உறுதியோடு சொல்கிறேன் - அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். திராவிட மாடல் 2.0- வும், இணையற்ற ஆட்சியாக இந்தியாவிலேயே தலைசிறந்த ஆட்சியாகதான் இருக்கும் என்று இப்போதே உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.