கிண்டி அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு புகார்!

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், நேற்று இரவு 7 மணியளவில் கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பண வசதி இல்லாததால் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் அவர், பித்தப்பை கல் பிரச்சனையால் அவதிப்படுவதாக கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் 12 மணியளவில், அவசர சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டும் அவரது உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் விக்னேஷின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது மருத்துவமனை தரப்பில் இருந்து விக்னேஷின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "பித்தப்பை கல் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பெற்று, நோய் தீவிரத்துடன் விக்னேஷ் அழைத்து வரப்பட்டார். விக்னேஷ் அழைத்து வரப்பட்ட அன்று அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர். குடல் நோய் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இறந்த விக்னேஷ்க்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
