சித்திரம் மூவீஸ் சார்பாக எ.அலோசியஸ் தயாரித்து, வி.கே.சிதம்பரம் இயக்கி முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் “இன்றைய சினிமா” என்னும் புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இன்று 16, பிப்ரவரி 2014 அன்று நடைபெற்றது. காங்கிரஸ் MLA விஜயதரணி, நடிகர் பவர்ஸ்டார், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் மற்றும் பலர் பங்குபெற்றனர்.
இத்திரைப்படத்தின் இசையை பவர்ஸ்டார் வெளியிட MLA விஜயதரணி பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய பவர்ஸ்டார், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எவரையும் ஏமாற்றக்கூடாது என்று அறிவுறுத்த ஆரம்பித்து பின்னர் “கோலி சோடா” திரைப்படத்தில் தன் அனுபவத்தை பற்றி விவரித்தார். தான் “கோலி சோடா” திரைப்படத்தில் ஒரு பாட்டில் நடிக்க (மன்னிக்கவும் நடிக்க இல்ல நடிக்க முயற்சிக்க) “கோலி சோடா” குழுவினரால், “நீங்கள் கண்டிப்பாக எங்கள் படத்தில் நடிக்க வேண்டும்” என்று அழைக்கப்பட்டதாகவும், ஆறு நாள் கால் சீட்டு கேட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் தன் காட்சிகள் மூன்றே நாட்களில் படம் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தான் நடித்த அந்த படத்தில், அப்படநிர்வாகம் தன்னை ஆரம்பத்தில் விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டதாகவும், பின்னர் அப்படம் வெற்றி பெற்றபிறகு தன்னுடைய படங்கள் எந்த ஒரு விளம்பரத்திலும் இடம் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். “கோலி சோடா” படத்தில் தான் நடித்ததற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பணத்தில், தனக்கு தயாரிப்பு நிர்வாகம் முழு பணத்தை தராமல் பணபாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். தனக்கு சேரவேண்டிய பணபாக்கியை “கோலி சோடா” தயாரிப்பு நிர்வாகத்தை தான் அணுகியதாகவும், அவர்கள் பாக்கி பணத்தை கொடுக்க முடியாது என்றும் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல் என்று கூறியதாக பவர்ஸ்டார் “கோலி சோடா” தயாரிப்பு நிர்வாகத்தை குற்றம் சாட்டினார்.
தன் பேச்சை முடிக்கும் முன்பு பவர்ஸ்டார் , “எல்லாரும் நான் ஏமாற்றுபவனாக நினைகின்றனர். நான் என் சொந்த உழைப்பில் என் பணத்தில் முன்னேறி உள்ளேன். நான் எவரையும் ஏமாற்றவில்லை. ஆனால் எனக்கு சேரவேண்டிய பணபாக்கியை கொடுக்காமல் என்னை ஏமாற்றுகிறார்கள். எல்லாரும் நான் ஏமாற்றுபவனாக நினைகின்றனர், ஏமாற்றுவதில் எனக்கு அப்பாக்கள் நிறையப்பேர் உள்ளனர்” என்று தனகென்று உள்ள நகைச்சுவை பாணியில் கொந்தளித்தார் பவர்ஸ்டார்.
பவர்ஸ்டார் கூறிய குற்றசாட்டுகளை பற்றி விசாரிக்க, “கோலி சோடா” திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட விஜய் மில்டன் அவர்களுடைய அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியும் மற்றும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.