அஜீத் – விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி 7 வருடங்கள ஆகின்றன. இதற்கு முன்பு அஜீத் நடித்த ஆழ்வாரும், விஜய் நடித்த போக்கிரியும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. அதன்பிறகு அதற்கான சூழல் அமையவில்லையா? இல்லை போட்டியே வேண்டாம் என்று அவர்களாக விலக்கிக்கொண்டார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ஜில்லா பொங்கல் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகிறது. பொங்கலுக்கு வீரம் படத்தை வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர். இதனால், மீண்டும் அஜீத்-விஜய் மோதுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
ஆனால் அப்படியொரு சூழ்நிலை உருவாகவே கூடாது என்று விநியோகஸ்தர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், இரண்டு பேரின் படமும் ஒரே சமயத்தில் தியேட்டருக்கு வந்தால், வசூல் பாதி பாதியாகி விடும். அதில் ஏதேனும் ஒரு படம் தோற்று விட்டால், அதை வாங்கியவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதே அதற்கு காரணமாம்.
அதனால், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் மோதவிடக்கூடாது என்பது சம்பந்தமாக சில விநியோகஸ்தர்கள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி விட்டார்களாம்.
இன்னொரு புறம் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். ஆனாலும் பிரியாணி விஜய், அஜித் படங்களோடு மோதுவதை வெங்கட் பிரபு விரும்பவில்லையாம். ஆக மொத்தத்தில் மூணு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதை ரசிகர்களை தவிர யாரும் விரும்பவில்லை.