இளையராஜா இசையில் வளரும் “ஒரு ஊர்ல”!

AVN5_ILAYARAJA_21557f

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. பருத்தி வீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் முறைமாமன் வேடத்தில் நடித்தவர். கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார்.  இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர்.

இந்த படத்தில் இவர்களுடன் இந்திரஜித், அண்ணபூரணி, நான் கடவுள் முரளி, சுந்தர், சிவா, ஜப்பான் கண்ணன், முல்லை நடலரசு, கோதண்டபாணி, மாதவி, வனஜோதி, பேபி சௌந்தர்யா என புதுமுக நடிகர்களுடன் கதாபாத்திரங்களுக்கேற்ப ஏராளமான கிராம மக்களும் நடிகர் நடிகைகளாக நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அருள் வின்சென்ட். இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர். D.S.வாசன் – இவர் விஜய் மில்டன் உதவியாளர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் கே.எஸ்.வசந்தகுமார். இவர் செல்வ பாரதி, ஏ.வெங்கடேஷ், வின்சென்ட் செல்வா போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். அத்துடன் துஷ்யந்த் நடித்த “மச்சி” என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தின் மூலம் தான் இசையமைப்பாளர் ரெஹைனா,பாடகர் கானா உலகநாதன் ஆகியோர் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ்! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித் உட்பட பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த வாழ்க்கை தான் ‘ஒரு ஊர்ல”. படத்தில் வரும் ஒரு இரும்புக்கடையின் பிரம்மாண்டத்தை யாரும் இதுவரை திரையில் பார்த்திருக்க முடியாது.

முழு படத்தையும் பார்த்துவிட்டு இளையராஜா சார் பாடல்களை கம்போஸ் செய்தார். அது மாதிரி இசையமைத்த பாடல்களும் படங்களும் வெற்றி பெற்றிருப்பது இதுவரை நடந்த நிஜம்! ஐந்து பாடல்களில் கிராமத்து நேடிவிடி இருக்கும்.

இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பதினெட்டு நாட்கள் படமாக்கப்பட்டது. ஈ, காக்கா கூட பறக்க முடியாத 250 ஏக்கர் பொட்டல் காடு மருந்துக்கு கூட ஒரு மரம் கிடையாது. அங்கு பதினெட்டு நாட்கள் படப்பிடிப்பு என்றால் யோசித்துப் பாருங்கள்” என்றார் இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார்.