பேருந்தில் நடக்கும் இசை வெளியீடு!!

4

மந்திர புன்னகை படத்தை அடுத்து கரு.பழனியப்பன் இயக்கி வரும் அடுத்த படம் ஜன்னல் ஓரம். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வித்தியாசமாக முறையில் அரங்கேற உள்ளது. அதாவது நாளை முழுவதும் சென்னை மாநகரமெங்கும் உள்ள பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் நடத்தப்படவுள்ளது.

ஜன்னல் ஓரம் திரைப்படத்தின், கதைநாயகர்களான விமலும் பார்த்தியனும் நடத்துனராகவும் ஓட்டுனராகவும் நடிக்கிறார்கள். எனவே இசை விழாவையும் பேருந்தில் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

விமல், பார்த்திபன் இவர்களுடன் ஜன்னல் ஓரம் படத்தில் பங்களித்த மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் மற்றும் பலருடன் ஒரு சிறப்பு மாநகரப் பேருந்தில் சென்னையை வலம் வந்து இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திரப் பட்டாளத்துடன் இயக்குநர் கரு.பழனியப்பன், வித்யாசாகர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை சுமந்து செல்லும் பேருந்து காலை 8.00 மணிக்கு சென்னையில் உள்ள வடபழனி பேருந்து நிலையத்தில் இசைக் கொண்டாட்டத்துடன் தன் ஜன்னல் ஓரப் பயணத்தை துவக்குகிறது.

தொடர்ந்து கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் முன்னிலையில் ஜன்னல் ஓரம் படப் பாடல்கள் வெளியிடப்படும்.

இறுதியாக மாலை 6.00 மணிக்கு கமலா திரையரங்கில் நடைபெறும் விழாவில் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா படத்தின் டிரெய்லரையும் பாடல் காட்சிகளையும் வெளியிடுகிறார்.