ஹீரோக்களை தொடர்ந்து சந்தானமும் பாடுகிறார்!!

Nambiyaar- santhanam ,vijay antony, srikanth, viveka, ganeshaa (15)

தனது படங்களில் டயலாக் அடிக்கும்போது அப்பப்போ பாடியிருக்கிறார் நம்ம டாப் காமடியன் சந்தானம். ஆனால் முதன் முறையா ஒரு முழுப்பாடலை ஸ்ரீகாந்துக்காக நம்பியார் படத்தில் விஜய் ஆண்டனி  இசையில் பாடி அசத்தியுள்ளார். விவேகா பாடல் எழுதிருக்கிறார்.

சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா கூறியதாவது, “இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன்  இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். காமடிக்கு பஞ்சமில்லாத கதைக்களம். அதற்காக வெறும் காமடிய மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல. சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, விஜய் ஆண்டனி சார் சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார். சந்தானம் மறுத்து விடுவார் என்றுதான்  நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்து விட்டார். ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக் கொடுத்துவிட்டார்.

‘ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி’ என்று ஆரம்பிக்கும் வரிகள்.  மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம் அந்த காட்சியை. அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பனி கொடுக்கும் ஸ்ரீ முதல் முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.

இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு செமையா பொருந்தி வந்திருக்கு என்றார் இயக்குனர் கணேஷா. ஸ்ரீகாந்த் கூறும்போது, சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக் கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். சந்தானத்துக்கு நிறைய நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” என்றார்.