கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் பிரியாணி. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது யுவன் சங்கர் ராஜாவுக்கு 100–வது படம் என்பதால் வருகிற 31–ந்தேதி அவரது பிறந்த நாளில் பாடல்களை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் முன்னதாகவே பாடல்கள் இன்டர்நெட்டில் வந்து விட்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கிண்டி சி.பி.சி. ஐ.டி. அலுவலகத்துக்கு நேரில் சென்று கூடுதல் கமிஷனர் கரன்சின்ஹா, சூப்பிரண்டு அன்பு ஆகியோரிடம் பாடல்களை இன்டர் நெட்டில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்கும்படி புகார் மனு அளித்தனர்.
பின்னர் வெங்கட்பிரபு நிருபர்களிடம் கூறும்போது, ‘‘யுவன்சங்கர் ராஜாவுக்கு இது 100–வது படம். வழக்கமாக ஒன்றிரண்டு பாடல்கள் முன்கூட்டியே இன்டர் நெட்டில் வருவது உண்டு. ஆனால் பிரியாணி படத்தில் மொத்தம் உள்ள எட்டு பாடல்களையும் யாரோ இன்டர்நெட்டில் வெளியிட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டு உள்ளோம் என்றார்.
நடிகர் கார்த்தி கூறும்போது, “சினிமாவை சிலர் விளையாட்டாக நினைத்து இது மாதிரி காரியங்களை செய்கின்றனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்றார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் பிரேம்ஜி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.