நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிராம பகுதியை சேர்ந்தவர் உமேஸ்வரன் (26). பி.ஏ பட்டப்படிப்பை முடித்து அரசு பணிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுவரை சும்மா இல்லாமல் தனது கிராம பகுதியில் சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணமான நிலையில், கணவர் நடத்தையில் சந்தேகம் காரணமாக அவரது செல்போனை எடுத்து மனைவி பார்த்துள்ளார். இதில் மோதல் ஏற்பட்டதால் கணவரை விட்டு மனைவி பிரிந்து சென்றார்.
பெற்றோருடன் வசித்து வந்த உமேஷ்வரன், அண்மையில் செல்போன் ரீசார்ஜ் செய்யும் பணியையும் செய்து வந்துள்ளார். ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களிடம் போனில் பேசுவதற்காக பணம் வாங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுக்கு இரவு நேரத்தில் வாட்ஸ் அப் மெசேஜ் செய்து வந்துள்ளார். இதனிடையே, அருகில் உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளும் ரீசார்ஜ் செய்ய வரும் போது அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி மெசேஜ் செய்துள்ளார்.
ஒரே பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 5 மாணவிகளிடம் தனித்தனியாக பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவிகளுக்கு இது குறித்த உண்மைகள் தெரியவே, `என்னுடன் மட்டும் தான் பழகி வருகிறார்’ என ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர். அதன்பிறகுதான் உமேஷ்வரன் தங்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு துறைக்கு 1099 என்ற எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, உமேஷ்வரன் குறித்து புகார் தெரிவித்தனர்.
அதிகாரி ஷோபனா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலில் மறுத்த உமேஷ்வரன், ஒரு கட்டத்தில் 5 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போக்சோ வழக்குபதிந்த போலீசார் உமேஷ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குன்னூர் சிறையில் அடைத்தனர்.