உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 16 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
நிகாசன் தொகுதிக்குட்பட்ட பதுவ காவல் நிலைய எல்லையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த சிறுமியை பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை மர்ம நபர்கள் பேருந்தில் அடித்து உதைத்தனர். இது குறித்து வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அதில் குற்றவாளிகள் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை தடுக்க முயன்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் அவர்கள் தாக்கினர்.
https://x.com/INCUttarPradesh/status/1918195195293954085?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1918195195293954085%7Ctwgr%5Eb1b8aaa9016bc2d9c31510667be7a76d45463462%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F
இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் சலீம் கூறுகையில், “பேருந்தில் சில இளைஞர்கள் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டனர். இதுபற்றி என்னிடம் சிறுமி கூறியதால் நான் தட்டிக்கேட்டேன். ஆனால் அவர்கள் என்னையும் அடித்தனர். நாங்கள் போலீசிடம் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை அறிவுறுத்தி அனுப்பிவிட்டனர்” என்றார். மேலும், குற்றவாளிகள் தன்னிடமிருந்து ரூ.25,500 பணத்தை கொள்ளையடித்ததாகவும் சலீம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எதிராக உத்தரபிரதேச காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ள அவர்கள், “ஒரு தலித் சிறுமி ஓடும் பேருந்தில் தாக்கப்பட்ட சம்பவம், யோகி அரசு மகளிருக்கு பாதுகாப்பளிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது” என குறிப்பிட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் சம்பவத்துக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும், குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.