எனக்கு மூணு வயது மகன் இருக்கிறான் தயவு செய்து அதற்காகவாவது விட்டு விடுங்கள் என்று கெஞ்சியும் விட்டு வைக்காத தீவிரவாதிகள்!

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (TRF) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்துள்ளது.

இதனிடையே பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி பஹல்காம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 26 பேரில் ஒருவரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதாகும் பரத் பூஷனின் உடல் இன்று பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனது கணவர், குழந்தையுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இடத்தில், தனது கணவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அந்த படுபயங்கர நினைவுகளை பரத் பூஷனின் மனைவி விவரித்துள்ளார்.

பரத் பூஷனின் மனைவி சுஜாதா கூறியதாவது ‘ஏப்ரல் 18 அன்று நாங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சென்றோம். பஹல்காமின் பைசரன் பள்ளத்தக்கை ஏப்ரல் 22 அன்று அடைந்தோம். குதிரைகள் மூலம் பள்ளத்தாக்கின் நடு பகுதிக்கு சென்றோம். அங்கு எங்களது 3 வயது மகனுடன் விளையாடினோம், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம், காஷ்மீரி உடைகளை அணிந்து பார்த்தோம். அப்போது தான் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

முதலில் பறவைகள் அல்லது காட்டு விலங்குகளை துரத்துவதற்காக யாரோ சுடுகிறார்களோ என நினைத்தோம், ஆனால் அங்கு சுற்றுலா பயணிகளை சிலர் சுட்டுக்கொல்வதை பார்த்து அங்கிருந்து நாலாபக்கமும் ஓடினார்கள், நாங்கள் பள்ளத்தாக்கின் நடு பகுதியில் இருந்ததால் ஓடி மறைவதற்கு இடம் இல்லை என்பதால் அங்கே இருந்த டெண்ட்களில் ஒளிந்து கொண்டோம்.

எங்களை போன்ற சுற்றுலா பயணிகளை துப்பாக்கிகளால் சுட்டுக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் குழந்தைகள் பரிதவிக்கையில் உங்களால் மட்டும் எப்படி சுற்றுலா செல்ல முடிகிறது என சொல்லிக்கொண்டே சிலரை நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டனர். சிலரிடம் ஆதார் கார்டுகளை வாங்கி அவர்களின் அடையாளங்களை சரிபார்த்தார்கள்.

பின்னர் எங்கள் டெண்டிற்குள் வந்து என் கணவரை தீவிரவாதிகள் வெளியே கொண்டு சென்றனர். எனக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்காக என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினார். ஆனால் தீவிரவாதிகள் எதுவும் பேசாமல் அவரை சுட்டுக் கொன்றனர்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இந்திய மக்களுக்கு பாகிஸ்தான் மீது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response