புல்லட் ஓட்டியதால் கைகளை வெட்டிய சாதி வெறியினர்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடவூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி (19) புல்லட் வாங்கி ஒட்டி வந்ததால் மற்ற சமூகத்தைச் சேர்ந்த கும்பல் நேற்று இரவு அய்யாசாமி புல்லட்டில் வந்த போது வழிமறித்து இரண்டு கைகளையும் வெட்டியது. போலீசார் இரவே மூவரையும் கைது செய்தனர். ராமன் – செல்லம்மா தம்பதிகளின் மகன் அய்யாசாமி (வயது19). இவர் சிவகங்கை அரசு கல்லூரியில் பிஎஸ்சி மேத்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமியின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விடவே, அவருடைய அம்மா அய்யாசாமியின் அப்பாவின் தம்பியான பூமிநாதன் இரண்டாவதாக திருமணம் செய்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அந்த கிராமத்தில் சற்று வசதியாகவும் புதிதாக வீடுகள் கட்டியும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இது அதே கிராமத்தில் வாழ்ந்து வந்த மற்ற சமூகத்தை (அகமூடையார்) சேர்ந்த இளைஞர்களான வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு இவர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூமிநாதன் (சித்தப்பா) புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார் வாங்கிய மறுநாளே இவர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்து உள்ளார்கள். பூமிநாதனையும் அடிக்க முயற்சித்துள்ளார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள் பிறகு ஊரில் வைத்து பேசி முடித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து நேற்று இரவு இளைஞர் அய்யாசாமி கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு புல்லட்டில் வரும் போது வீட்டின் அருகே மறைந்த கும்பல், ‘இந்த ஜாதியில இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்..’ என்று கூறி இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளார்கள். கை இருந்தால்தானே ஓட்ட முடியும் என்பது என்ற நோக்கத்துடன் அவர்கள் கையை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த அய்யாசாமியை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே அங்கிருந்து உயர் சிகிச்சையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் அந்த கும்பல் பூமி நாதனின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, வீட்டின் ஓடு சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இதில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்து சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர். இதில் வினோத் தப்பி மதுரைக்கு பஸ்சில் செல்லும் போது போலீசார் திருப்பாச்சேத்தி அருகே மடக்கி கைது செய்தனர். இதில் வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது காயம் பட்ட அய்யா சாமிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் சேர்ப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response