2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் ஆளும் திமுக, ஆட்சியை தவறவிட்ட அதிமுக இடையே கடும் போட்டி நிலவவுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி, நாதக ஆகிய கட்சிகளின் மீதும் மக்கள் பார்வை இருப்பதால், வாக்கு பிரிந்து வெற்றி-தோல்வி வாய்ப்பில் பெரும் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த தேர்தல் பரபரப்பில் மக்களுக்கான ஆட்சியை கொடுப்பேன் என நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கி இருக்கிறார். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக அலுவலகம் பரபரப்பில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், உழைத்தவர்களுக்கு பதவிகளை கொடுக்காமல், ஜாதியை பார்த்து பதவி கொடுத்து பட்டியலின மக்களான தங்களை புறக்கணிப்பதாக நிர்வாகிகள் சிலர் பகீர் பேட்டி அளித்தனர்.