தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருக்கு, அமைச்சர் துரைமுருகன் அளித்த நக்கல் பதில்!

தமிழக சட்டப்பேரவையின் 4 ஆம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி பதில் நேரத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இன்றைய கூட்டத்தின் போது, சிறப்பு நிகழ்வாக கருதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டி கிராமம் அருகே மணிமுக்தா ஆற்றில் நிதிநிலையை பொறுத்து தடுப்பணை கட்டப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டமன்றத்தில் உறுப்பினர் உதயசூரியன் எழுப்பிய கேள்விக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ” தற்போது ஏற்பட்ட மழை, வெள்ளம் புயலின் காரணமாக, எனது தொகுதியில் உள்ள உளுந்தம்பேட்டை, நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியது. மத்திய அரசின் குழுக்களும், நீர்வளத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பணை கட்டி பாதுகாப்பு சுவர் அமைத்து தரும்படி அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அண்ணன் உங்கள் காலத்தில் செய்து தாருங்கள்.” என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது பேசிய, அமைச்சர் துரைமுருகன், ” உறுப்பினர் வேல்முருகன் சொன்ன அந்த திட்டத்தை அதிகாரிகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அதை, இந்தாண்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், இதை ஒரே வரியில் கேட்டிருக்காலம்.. இவ்வளவு நேரம் கேட்டங்களே அதான் நான் சமாளிக்க கஷ்டமாக போச்சு.” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது பரபரப்பை கிளப்பி இருந்தது. இருப்பினும், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response