சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படித்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும் சார் என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகையால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடிதத்தையே வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஆன்லைனில் கசிந்த மாணவியின் புகார் குறித்த முதல் தகவல் அறிக்கை நகல் யாரும் பார்க்க முடியாதபடி காவல் துறை முடக்கியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று மாலை விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது ஒருவர் தான் குற்றவாளி என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? விசாரணை அதிகாரி ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர். அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார். செய்தியாளர்களை சந்திக்கும் முன் அரசிடம் அனுமதி பெற்றாரா காவல் ஆணையர்? அரசு அதிகாரிகளின் நடத்தை விதிகளின்படி அனுமதி பெற்றாரா அருண்? என கேள்வி எழுப்பினார்.
காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டு உள்ளது.பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா. மேலும், கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தப்பி ஓட முயற்சித்ததாகவும் அவரை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. குற்றத்தை தடுக்க வேண்டியதும், குற்றவாளியை கைது செய்ய வேண்டியது போலீசாரின் கடமை. அதற்காக பாராட்ட வேண்டுமா என கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனவும், குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை வளாகத்தில் உலவி வருகிறார். அதை விசாரித்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினர்.
பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது எனக் கூற யாருக்கும் உரிமையில்லை. பெண்களுக்கு முழு உரிமை உண்டு. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம். பல்கலைக்கழகத்தில் மாணவி அங்கு சென்றிருக்கக்கூடாது என பேசக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதேபோல மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்தும் அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர்.