புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரை விஜய் கட்சி உருப்படாது – திருச்சி சூர்யா.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். மேலும் இந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்றாலும், இதுவரை அவர் ஊடகங்களை நேரடியாகச் சந்திக்கவில்லை. இது அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது. இதுமட்டும் இல்லாமல், தொடர்ந்து அறிக்கைகளினாலும் எக்ஸ் பதிவுகளினாலுமே அரசியல் செய்து வருகின்றார் என்ற விமர்சனமும் வைக்கப்படுகின்றது.

மேலும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சநடிகர். இவர் தனது படங்களில் அரசியல் பேசும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார். இதனால் இவர் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற கருத்து நிலவி வந்தது. அதற்கு ஏற்றாற்போல் கடந்த பிப்ரவரி மாதம் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். மேலும் தனது கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் எம்.எல்.எ புஸ்ஸி ஆனந்தை நியமித்தார்.

இதனால் பத்திரிகையாளர்களை புஸ்ஸி ஆனந்த் சந்தித்துவந்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைக் கூறிவந்தார். இந்நிலையில் திமுக மற்றும் பாஜகவில் இதற்கு முன்னர் இணைந்து செயல்பட்டு வந்தவரான திருச்சி சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் மிகவும் முக்கியமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில், நடிகர் விஜய் குறித்தும் புஸ்ஸி ஆனந்த் குறித்தும் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், ” விஜய் சத்தியமாக உருப்பட மாட்டார் என்பதற்கு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. புஸ்ஸி ஆனந்தை உடன் வைத்திருக்கும்வரை சத்தியமாக தமிழக வெற்றிக் கழகம் உருப்படாது. தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் புலம்புகின்றார்கள். அனைத்து நிர்வாகிகளையும் கெட்ட வார்த்தையில் திட்டுகின்றனராம். ரூமுக்குள் கூட்டிக் கொண்டு சென்று அடிக்கின்றாராம். அனைவரையும் கன்னாபின்னாவெனத் திட்டுகின்றாராம்.

புஸ்ஸி ஆனந்த்: புஸ்ஸி ஆனந்த் எம்.எல்.ஏ யாக இருந்தவர். எம்.எல்.ஏ என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனலாம். ஆனால் புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டவர். அதாவது அவரை மக்கள் தேர்வு செய்யவில்லை. எம்.எல்.ஏ யாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு அரசியல் அறிவு இருக்கும் என நினைத்து அவரைப் பொதுச்செயலாளராக நியமித்து, எல்லாம் செய்யுங்க எனச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் சொதப்புகின்றார். நிறைய விஷயங்களை அவரே உடைத்து விடுகின்றார். இப்போ, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு இடத்திற்குப் போகின்றார் என்றாலோ, உதயநிதி ஒரு இடத்திற்கு போகின்றார் என்றாலோ அவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தையும் கலைஞர் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு செல்வார்களா? அதில் இருந்தே உங்களின் அரசியல் முதிர்ச்சி தெரியவேண்டாமா? இப்படியானவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நாளை விஜய் அரசியலில் களமிறங்கினால், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்” எனப் பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Leave a Response