சூர்யாவை பார்க்க குடும்பத்தோடு வராங்க – தியேட்டர் அதிபர்கள் புகழாரம்!

IMG_0900

சூர்யா – அனுஷ்கா – ஹன்சிகா – விவேக் – சந்தானம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம் 2 படம் கடந்த வெள்ளிகிழமை உலகம் முழுவதும் 2400 அரங்குகளில் வெளியானது. படம் பெரிய வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில், சிங்கம் 2 தான் எனக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் சூர்யா.

சிங்கம் 2 வெளியான மூன்றே நாட்களில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக சிங்கம் 2 படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய தியேட்டர் அதிபர்கள், “இந்த படத்தை வாங்கியதால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் சூர்யாவை எடுத்துகொண்டால் ரசிகர்கள் தவிர்த்து, அவருக்கு நடுத்தர வர்க்க பெண்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எந்த படத்துக்கும்  போகாமல் டிவியில் படத்தை பார்ப்பவர்கள். இவர்கள் சினிமாவுக்கு வந்தால் கணவர், குழந்தை என வருவதால் எங்களுக்கு மூன்று டிக்கெட் காசு கிடைக்கிறது. இதை சூர்யா எப்போதும் தக்க வைத்துகொள்ள வேண்டும். மேலும் நாங்கள் திரையிட்ட இந்த மூன்று நாட்களிலும் குடும்பத்தோடு வந்து பார்க்கிறார்கள். இன்று இரவுக்காட்சி வரை அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்” என்றனர்.

விழாவில் பேசிய சூர்யா, ”எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்தே என் மனைவி ஜோதிகா என் படங்களை பார்த்ததில்லை. ஆனால் இந்த படத்தை என்னோடு சேர்ந்து கைதட்டி, ரசித்து பார்த்து பார்த்தார். என் அம்மா, தங்கை, தம்பி ஆகியோரும் என்னை பாராட்டினார்கள். என்னால் மறக்க முடியாதது “உன்னை நெனச்சி ரொம்ப பெருமைப்படுறேன்”னு அப்பா எனக்கு அனுப்பிய மெசேஜ். எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

விழாவில் இயக்குனர் ஹரி, நடிகர்கள் விஜயகுமார், ரகுமான், நாசர், மதன்பாப், தியாகு,பாடலாசிரியர் விவேகா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் பிரியன்,தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.