தலைமறைவானது ஏன்.? – நாம் தமிழர் கட்சி காளியம்மாள் விளக்கம்.

கடந்த ஒரு மாதம் முன்பாக காளியம்மாளைப் பற்றி சீமான் பேசிய ஆடியோ பதிவு ஒன்று ஊடகங்களில் மிக வேகமாக பரவியது. அதில் சீமான், ‘காளியம்மாளை ஒரு பிசிறு. அதைத் தட்டிவிட்டால் சரியாகப் போய்விடும்’ என்று பேசி இருந்தார். கட்சிக்காக உழைக்கும் பலரை சீமான் தொடர்ந்து வெளியேற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் தருணத்தில், அவர் காளியம்மாள் பற்றி இப்படிப் பேசியதை அவரது கட்சியினரே ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஆடியோ லீக் ஆன பிறகு காளியம்மாள் முற்றிலும் அமைதியானார். அவர் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்த 4 கூட்டங்களைப் புறக்கணித்து வந்தார். அவர் எங்கே இருக்கிறார்? என்பதை தெரியாமல் பல யூடியூப் சேனல்கள் அவர் தலைமறைவாகிவிட்டதாகக் காணொளி வெளியிட்டு வந்தனர். இவரைப் பற்றி நூற்றுக்கணக்கான வீடியோக்கள். அத்தனைக்கும் காளியம்மாள் தந்த பதில் அமைதி.

சமீபத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி ஒன்று காளியம்மாள் விஜய் கட்சியில் மாநாட்டில் இணைய இருப்பதாகச் செய்தி வெளியிட்டது. அதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில்தான் காளியம்மாள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து சில விசயங்களைப் பேசி இருக்கிறார். அவர் சீமான் கட்சியிலிருந்து விலக இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதிமுக அல்லது விஜய் கட்சியில் பேரம் பேசப்பட்டதா? அனைத்தையும் புட்டுப் புட்டு வைத்துள்ளார் காளியம்மாள்.

அவர் அளித்துள்ள பேட்டியில் “ஆடியோ லீக் ஆன பிறகு நான் கொஞ்சம் மவுனமாக இருந்தது உண்மைதான். பேச வேண்டாமே என இருந்தேன். வீட்டில் சில வேலைகள் இருந்ததால், அதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் பேசாததை வைத்துக் கொண்டு என்னைப் பற்றி விதவிதமாக வீடியோகள் வெளியிட்டார்கள். விநோதமான தலைப்புகள். அதை எல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வந்தது. அதில் ‘தமிழா தமிழா’ பாண்டியன் என்று ஒருவர். நான் பாஜகவில் இணையப் போவதாக ஒரு யூடியூப்பில் பேசி இருந்தார். அதற்காக அண்ணாமலையிடம் பாஜக தேசிய தலைமை ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டது. அவருக்குப் பதிலாக காளியம்மாளை பாஜக மாநிலத் தலைவராக அறிவிக்க இருக்கிறது. அவர் மீன சமுதாயத்தில் பலம் கொண்டவர் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார்கள் என்று பேசி இருந்தார்.

அவர் பேசிய அந்த வீடியோவை கண்டிப்பாகப் பார்க்கவும் என்று சொல்லி அனுப்பி இருந்தார்கள். அதனால் அதைப் பார்த்தேன். இவரைப் போன்று கதைவசனம் எழுதக் கூடிய ஆட்களை எப்படி பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் விட்டார்கள் என்றே புரியவில்லை. அப்படிக் கதை எழுதுகிறார். இதற்கு எல்லாம் என்ன ஆதாரம் என்றே தெரியவில்லை. வெளிப்படையாகச் சொல்கிறேன். ஒரு பாஜகவினர் கூட என்னை அணுகி இதைப்போன்று கட்சியில் சேருமாறு பேசியதே இல்லை. அதுதான் உண்மை.

இன்னொரு யூடியூபர் எனக்கு 30 கோடி பேரம் பேசிவிட்டார்கள். எனக்கு ஃபார்ச்சூனர் கார் ஒன்றும் கொடுக்க இருக்கிறார்கள். கூடவே வீடும் ஒன்று கட்டி தருகிறார்கள் என்று காணொளி போட்டிருந்தார். ஒருவர் நான் சிங்கப்பூர் போவதாகவும் அங்கே அதிமுக முன்னாள் அமைச்சர் அங்கே வரப் போவதாகவும். அங்கேயே பேரம் நடத்தப்பட்ட இருக்கிறது என்று வீடியோ போட்டிருந்தார். வெளிப்படையாகச் சொல்லப் போனால் பாஜகவைத் தவிர்த்து அனைத்து கட்சியினரும் என்னிடம் பேசினார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், சீமான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அதற்காக அரசியலைவிட்டு நீங்கள் வெளியேறிவிடவேண்டாம். இன்னும் மனவலிமையோடு போராடுகள் என்றுதான் அறிவுரை தந்தார்கள். யாரும் கட்சிக்கு வரச் சொல்லி பேரம் பேசவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு நான் நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன். 5 ஆண்டுகளாகக் கட்சியில் உள்ளேன். இதுவரை ஒருமுறை கூட என்னைச் சீமான் கோபமாகத் திட்டியதே இல்லை. அவர் என்னை குலத் தெய்வம் என்று கூடச் சொல்லி இருக்கிறார். பலமுறை மேடைகளை என்னைப் பாராட்டி இருக்கிறார். 2024 தேர்தலில் என் உடல்நிலையைக் காரணம் காட்டி நான் நிற்கவில்லை என்று மறுத்தேன். அப்போது அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். அப்போதும் அவர் கோபம் கொள்ளவில்லை.

இந்த ஆடியோ பதிவு வெளியான பிறகு ‘நான் நேரில் உன்னிடம் பேசுகிறேன்’ என்று சீமான் ஒரு குரல் பதிவு போட்டிருந்தார். சமீபத்தில் சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கும் கட்சி சார்பில் அழைப்பு வந்தது. அன்று ஆடி அமாவாசை. வீட்டில் மூத்தோர் படையல். எனவே போக முடியவில்லை. அன்பின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி என் பிறந்தநாள். அதற்கு தொலைப்பேசி செய்து வாழ்த்து சொன்னார். மீண்டும் எங்கள் ஊர் கோயிலுக்கு சாமி கும்பிட சீமான் வந்தார். அப்போது போய் சந்தித்தேன். அதையொட்டி ஊரில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அவருடன் அரை மணிநேரத்திற்கு மேல் அருகில் அமர்ந்து பேசினேன்.

பலவிதமாகப் பேசிவருகிறவர்களைப் பார்த்து நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். என்னுடைய பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவோ அல்லது நான் நல்லபடியாக வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகவோ இந்த அரசியல் வாழ்க்கைக்கு நான் வரவில்லை. நான் மீன மக்களின் விடுதலைக்காக அரசியல் வந்தேன். அரசியலுக்குள் வந்த பிறகு தமிழினமே அப்படித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

நான் கட்சியில் உறுதி எடுக்கும்போது இந்த நிலத்திற்காகப் பாடுபடுவேன் என்று சொன்னது வெறும் வார்த்தை அல்ல. அது உண்மை. நாம் தமிழர் அரசியல் களத்தில் என்னால் முடிந்தவரை முட்டி பார்ப்பேன். முட்ட முடியாத நிலைமை வந்தால் அப்போது நான் சொல்கிறேன். ஒருவேளை நாம் தமிழர் கட்சியை விட்டுப் போகவேண்டிய நிலை வந்தால், அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். அதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்” என்கிறார்.

Leave a Response