தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த 21 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்து வருகிறது.
இதுவரை நீர் வளத் துறை, இயற்கை வளங்கள்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அந்த நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.
இதைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக் கல்வித்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.
சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசுவார்கள். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
மாலை 5 மணிக்கு நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத் துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத் தொடரிலாவது அதிமுக அமளி, வெளிநடப்பு செய்யாமல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.