வாழ்க்கையில் முக்கியமான ஒன்று படிப்பு. படிப்பு மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் , அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடங்கியது. சுமார் 40நாட்கள் விடுமுறையை மாணவர்கள் சுற்றுலா சென்றும், சொந்த ஊருக்கு சென்று தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து 2024-2025ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.
உற்சாகத்தில் மாணவர்கள்
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் இன்று முதல் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ளனர். இதற்காக கடந்த 10 தினங்களாகவே பொற்றோர்கள் தயாராகி வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான சீருடை, பேக், புத்தகம், நோட் , பென்சில், பேனா போன்ற பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர். இன்று காலை முதல் பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டனர். நண்பர்களை இரண்டு மாத காலத்திற்கு பிறகு சந்திக்கும் மகிழ்ச்சியில் கிளம்பியுள்ளனர். அதே நேரத்தில் கோடை விடுமுறை இன்னும் நீட்டித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் ஒரு சில மாணவர்களும் கவலையோடு பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு இனிப்பு
இரண்டு மாதங்களாக மூடிக்கிடந்த பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் நாளிலேயே இனிப்பு பொங்கல் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் பள்ளிகள் இந்தாண்டிற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பள்ளி நாட்களை 220 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.