நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நாளை காலை 8 மணி முதல் நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு காலை 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் தொகுதி வாரியாக ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் முதல் 30 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும். மேலும் வாக்கு எண்ணும் பணிக்காக அலுவலர்கள், உதவியாளர்கள் உட்பட மொத்தம் 24 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் 4500 நுண் பார்வையாளர்கள், 58 பொது பார்வையாளர்கள், 817 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் வாக்கு எண்ணும் மையங்களிலும், 1 லட்சம் போலீசார் தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
முன்னதாக வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு 2 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.