555 படத்தால் கிடைத்த இந்திப்பட வாய்ப்பு!

Bharath-Six-Pack-555-Movie

‘பாய்ஸ்’ படத்தில் ஷங்கர் மூலம் அறிமுகமான பரத் அதன்பிறகு “காதல்”, “பட்டியல்”, எம் மகன்”, “வெயில்”, பழனி”, சேவல்”, அரவான்” போன்று  சுமார் 20 படங்களில் நடித்திருப்பவர். இவர் நடித்து “கில்லாடி”, “555” படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் இவருக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்க அழைப்பு வந்து உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கியாகி விட்டது.

இந்த படத்தை பற்றியும், படத்தில் வாய்ப்பு கிடைத்தது நடிகர் பரத் கூறும்போது, “ஒவ்வொருவருக்கும் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிலருக்கு கனவாக கூட இருக்கும். ஏனென்றால் இந்தி மார்கெட் அவ்வளவு பெரியது. இந்தியில் நடித்துவிட்டால் இப்போது உலகப்புகழ் கிடைத்து விடுகிறது. நான் இது பற்றி சிந்தித்ததில்லை. நாமெல்லாம் எங்கே நடிக்க போகிறோம் என்று இருந்தேன்.

“ஒரு நாள் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. தாங்கள் ‘555’ படத்தின் ஸ்டில்கள், விளம்பரங்களை பார்த்ததாகவும் பிடித்து இருந்ததாகவும் உடனடியாக மும்பை வர முடியுமா என்றும் கேட்டார்கள். மும்பை போனேன். அவர்களுக்கு பிடித்து விட்டது. அது தான் ‘ஜாக்பாட்’ படம். எனக்கு இந்த பட வாய்ப்பே ஒரு ஜாக்பாட் வாய்ப்பு போல தான். இரண்டே நாளில் முடிவாகி விட்டது.

ஜாக்பாட் படத்தை தயாரிப்பது வைக்கிங் மீடியா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். இயக்குவது கெய்சாத் குஸ்தாத். இவர் அமெரிக்காவில் சினிமா படித்தவர். “பாம்பே பாய்ஸ்”, “பூம்” போன்ற படங்களை இயக்கியவர். கத்ரினா கைப்பை அறிமுகம் செய்தவரே இவர் தான். படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்தர் சுராவ்ஸ்கி. இவர் போலந்துகாரர். ஹாலிவுட் ஈரானில் கொரியன் படங்களில் பணியாற்றியவர். இந்தப் படத்துக்கு 7 பேர் இசை அமைக்கிறார்கள். இது ஒரு காமெடி த்ரில்லர்.

படத்தில் நான், சச்சின் ஜோஷி, நஸ்ருதீன் ஷா, சன்னி லியோன் நான்கு பேர் முக்கிய கேரக்டர்கள். எங்களைச் சுற்றி தான் கதை நிகழும். நான்கு பேரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஏமாற்றிக் கொள்ளை அடிப்போம். நான் பாண்டிசேரியிலிருந்து கோவா போய் தங்கிவிட்ட தமிழ்ப் பையனாக நடிக்கிறேன். அங்குள்ள கேஸினோ எனப்படும் கேளிக்கை விடுதியில் வேலை பார்ப்பேன். இந்தக்கதை கோவா, மும்பை என இரண்டு நகரங்களிலும் நடக்கும். இதில் நடிக்கும் நடிகர்களில் இளையவன் நான்தான். இருந்தாலும் தமிழ் திரையுலகின் மீதுள்ள மரியாதையால் என்னை அன்பாக நடத்துகிறார்கள்”. இவ்வாறு பரத் கூறினார்.