தன் சினிமா பயணத்தை பற்றி கூறும் நாயகன் சந்தோஷ் சரவணன்

சினிமாவை நேசிப்பவர்களை சினிமா என்றுமே கைவிட்டது இல்லை, என்று ஜாம்பவான்கள் பலர் சொல்வதை நிஜமாக்கும் விதத்தில் பலர் சினிமாவில் வெற்றி பெற்று உயரங்களை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், எந்தவித சினிமா பின்புலமும் இன்றி நம்பிக்கையோடு கோலிவுட்டில் நுழைந்த நடிகர் சந்தோஷ் சரவணன், தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘இது கதையல்ல நிஜம்’ படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சரவணனின், நடிப்பை பத்திரிகைகள் வெகுவாக பாராட்டிய நிலையில், அவரை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறதாம்.

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கும் இளம் ஹீரோ சந்தோஷ் சரவணன், தனது சினிமா பயணம் குறித்து கூறுகையில்,

“சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கோல்காரனூர் என்ற கிராமம் தான் என் ஊர். நான் என் கல்லூரி படிப்பை ஈரோடு மாவட்டத்தில் முடித்தேன். பொறியியல் பட்டதாரியான நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
எங்கள் ஊரில் ‘மேச்சேரி வனபத்ரகாளி’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த படத்தின் இயக்குநர் ஆனந்தன் சார் எனது அப்பாவின் நண்பர் என்பதால், அந்த படத்தில் என்னை முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வைத்தார். அதன் பிறகு தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. எனது குடும்பத்தினரும் என்னை சினிமாவில் பயணிக்க அனுமதியளித்தார்கள் .

அப்பா,அம்மாவின் அனுமதியோடு வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். ஆனால், வேலை செய்துக்கொண்டே வாய்ப்பு தேடுவது கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. இதை என் அப்பாவிடம் சொன்னதும் அவர், “சினிமா துறையில் உனக்கு ஆர்வம் இருந்தால், வேலையை விட்டுவிட்டு அதில் முழுமூச்சாக ஈடுபடு” என்று சொல்லிவிட்டார். அதே சமயம், என் அப்பாவிடம் இரண்டு வருடங்கள் முயற்சிப்பேன், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திரும்பி வந்துவிடுவேன், என்று கூறிவிட்டு சென்னைக்கு வந்தேன்.

இனி சினிமா தான் என்று முடிவாகிவிட்டது, எனவே அதற்காக என்னை தயாரிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப்பயிற்சி பெற்றேன். ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டேன். தியேட்டர்லேப் ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்பு பயிற்சியை முடிப்பதற்கு முன்பாகவே ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் மூன்று நாட்கள் டெஸ்ட் ஷூட் என்று சொல்லி தான் அழைத்தார்கள். அப்போது எனக்கு ஹீரோ என்பது தெரியாது. இயக்குநர் அருவியில் குதிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு நீச்சல் கூட தெரியாது, ஆனால் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதால் குதித்துவிட்டேன், பல காயங்களும் அடைந்தேன் பிறகுதான் இயக்குநர் கண்ணன் சார் சொன்னார் நீ தான் இந்த படத்தின் ஹீரோ என்று.

’இது கதையல்ல நிஜம்’ படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். முக்கியமாக நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படம் முடிந்து பிரிவியூ போட்டார்கள். அதை பார்த்துவிட்டு தான் எனக்கு ‘கால் டாக்ஸி மற்றும் ‘கண்மணி பாப்பா’ பட வாய்ப்புகள் வந்தது. அந்த படங்களை முடித்த உடன் ‘உதிர்’, ’ரவாளி’ படங்களின் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களும் முடிவடைந்து விட்டது, விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது ‘நொடிகள் ஆயிரம்’ படத்தில் நடித்து வருகிறேன். மேலும், சில படங்களின் கதைகளை கேட்டு வருகிறேன். நல்ல நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக தான் கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இதுவரை நான் நடித்த படங்கள் அனைவரிடத்திலும் பாராட்டு பெற்றது. இனியும் அப்படிப்பட்ட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இனி சினிமா தான் என் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அதனால் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சினிமாவுக்காக நான் உழைப்பேன்.

எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் என் மீது வைக்கும் நம்பிக்கையை என்றுமே காப்பாற்றுவேன். எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. என் நடிப்பை பார்த்து வருகிறதா, இல்லை என் அதிஷ்ட்டமா, இல்லை என் அப்பாவின் ஆசையா, என்னவென்று தெரியவில்லை. ஆனால், எப்போதும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் ” என்றார்.

Leave a Response