இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் – இயக்குநர் பாலா

இயக்குநர் பாலாவின் ‘B Studios’ தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “விசித்திரன்”. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்

சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசுகையில்,

“மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச்ச படம், இத்தனை அவார்டு வாங்கின படத்த ரீமேக் பண்ண யாரும் யோசிப்பாங்க, அதிலும் பெஸ்ட் ஹீரோ அவார்ட் வாங்கின படம், அப்படி ஒரு படத்த தைரியாமா நல்ல படத்த கொடுக்கனுமுனு எடுத்துட்டு வந்திருக்காங்க. இந்த படத்தில் நடிக்க நிறைய தைரியம் இருக்கனும், சுரேஷ் எதையும் துணிந்து செய்வார். பாலா அண்ணனின் படத்தில் அறிமுகமாகி, இன்று ஜோசப்பில் நடித்திருக்கிறார். இயக்குநர் பத்மகுமார் அவர்களே இங்கும் இயக்கியிருப்பது படத்திற்கு பலம். ஜீவி உற்சாகமான இசையை தருபவர். அவரது இசை இந்தப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் முரளி பேசும்போது,

“சுரேஷ் இந்தப்படத்திற்கு எவ்வளவு உழைத்துள்ளார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். பாலா சார் தயாரித்த பிசாசு படத்தை நாங்கள் தான் வெளியிட்டோம். தரமான படமாகவும் வசூல் குவித்த படமாகவும் இருந்தது. அதே போல் இந்த படமும் இருக்கும். ஜீவி பிரகாஷ் இசை எப்போதும் மனதை சாந்தப்படுத்தும். இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி” என்று வாழ்த்தினர்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,

“ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார். ஜீவி பிரகாஷ் இசை கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் நன்றி” என்றார்.

பகவதி பெருமாள் கூறியதாவது,

“சினிமா எப்பவும் எனக்கு ஆசிர்வாதம் செய்து கொண்டே தான் இருக்கும் இந்தப்படமும் எனக்கு ஆசிர்வாதம் தந்துள்ளது. இந்தப்படத்திற்கு அழைத்து, பாலா சார் பார்க்கனும் என்றார்கள், அவர் சொல்லியிருந்தால் உடனே செய்திருப்பேன் ஆனால் அவர் இந்த ரோல் நீங்க பண்ணினா நல்லா இருக்கும் பண்றீங்களா என்றார், சார் என்னிடம் இதெல்லாம் சொல்லாதீங்க சார், நீங்க சொன்னாலே செய்துவிடுவேன் என்றேன். அவர் தந்த வாய்ப்புக்கும் அவரது அன்புக்கும் நன்றி. பத்மகுமார் சார் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் வைத்துள்ள டீடெயிலிங் பிரமிப்பாக இருந்தது. அவர் முழு சுதந்திரம் தந்து நடிக்க வைத்தார், சுரேஷ் சாருக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி” என்று கூறினார்.

நாயகி மது ஷாலினி பேசியதாவது,

“இந்த பாத்திரத்தை எனக்கு தந்ததற்காக, பத்மகுமார் சாருக்கு முதல் நன்றி. RK சுரேஷ் சார் இந்த படத்தில் பல தோற்றங்களில் வந்திருக்கிறார், ஒரு படத்தில் வேறு வேறு தோற்றத்தில் தோன்றுவது கடினம் ஆனால் அவர் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஜீவி இசை அருமையாக இருக்கிறது. பாலா சார் என்னை ஞாபகம் வைத்து அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி சார், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்று பேசினார்

நடிகை பூர்ணா பேசியதாவது,

“ஒரு இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தில் வருவது மிக சந்தோஷமாக இருக்கிறது. பாலா சார் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும், பாலா சார் வாய்ப்பு தாருங்கள். ஜோசப் மலையாளத்தில் ஒரு மைல்கல் படம் பத்மகுமார் அட்டகாசமாக இயக்கியிருந்தார். அவர் எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஜீவி பிரகாஷ் பேசியதாவது,

“பாலா சாரின் B Studios உடன், வேலை பார்க்கும் மூனாவது படம். என்னை கமிட் பண்ணும் போது ஜோசப் பற்றி எனக்கு தெரியாது. அதன் பிறகு தான் பார்த்தேன் பத்மகுமாரின் இயக்கம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரது காட்சிகளை பார்த்துதான் இசையமைத்தேன். சுரேஷ், பூர்ணா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள், இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,

“ஜோசப் படத்தோட ரீமேக் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இது அப்படியில்லை. அதை அப்படியே ரீமேக் மாதிரி செய்யாமல், நிறைய காட்சிகளை இதில் சேர்த்து ஒரு புதுப்படம் போல அருமையான நடிகர்களோடு கொண்டு வந்துள்ளார்கள். முதலில் இந்தப்படம் பாத்தவுடனே நானும் ரீமெக் பண்ண ஆசைப்பட்டேன். ஆனால் சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றார். வில்லனாக நடிக்கும் அவர் எப்படி இந்த பாத்திரம் செய்வார் என நினைத்தேன், ஆனால் அவர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள். பாலா அண்ணன் இந்த நல்ல படத்தை தமிழுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று வாழ்த்தினர்.

இயக்குநர் பத்மகுமார் பேசியதாவது,

“என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள். சென்னையில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்த நாளில், என் படத்திற்காக மேடை ஏறுவேன் என நான் நினைக்கவில்லை. அதற்கு இரண்டு பேருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பாலா சார் மற்றும் நடிகன் சுரேஷ் இருவருக்கும் பெரிய நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி’ என்று கூறினார்.

நடிகர் தயாரிப்பாளர் சுரேஷ் பேசியதாவது,

“என் தந்தை, என் அம்மா, என் தந்தைக்கு அடுத்து என்னை கை தூக்கி அழைத்து செல்லும் பாலா அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. 13 வருசமா நான் திரைத்துறையில் இருக்கிறேன். பத்திரிக்கைகள் எனக்கு நிறைய ஆதரவு தந்துள்ளார்கள். இப்போது திரையரங்குகள் முழுக்க திறந்த பின் என் பட விழா நடப்பது மகிழ்ச்சி. ஜோசப் படம் பார்த்துவிட்டு, அது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது, பாலா அண்ணனிடம் போய் சொன்னேன், இது நல்ல படம் ஆனால் இந்தப்படத்திற்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். இந்தப்படத்திற்காக உடல் எடை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால் தான் சினிமா அங்கீகாரம் தரும். பாலா அண்ணன் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார்களை இயக்கிய பத்மகுமார் சார் இயக்கத்தில் நடிப்பது வரம். என் படகுழுவினருக்கு நன்றி. ஜீவியின் ரசிகன். அவரது இசைக்கு நன்றி எல்லோருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர், இயக்குநர் பாலா பேசும்போது,

“வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்த ரீமேக் பண்ணலாம் என்ற போது சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றான். அப்ப அதே டைரக்டரை அழைப்போம் என அவரை கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாள படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் அதை அவன் காப்பாற்றி கொள்ள வேண்டும், படம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி” என்று பேசினார்.

Leave a Response