புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு “தலைவி” படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய். இப்படத்தில் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாசர், சமுத்திரக்கனி, மதுபாலா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.
“தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு மதன் கார்கி வசனம் எழுத, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குநர் விஜய் பேசுகையில்,
“இப்படம் எனது கனவல்ல என்னுடைய குழுவினரின் கனவு. இந்த கனவு நனவாக உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. திரையரங்கில் படத்தை கொண்டு வருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஜி வி இதில் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்தப்படத்தின் ஆத்மாவே அவர்தான். விட்டல் நம் வீட்டு பையன், மும்பையில் செட்டிலானவர். இப்படத்தில் அருமையான பணியை தந்துள்ளார்.
இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள். அர்விந்த்சாமி வரலாற்று சிறப்பு மிக்க நடிப்பை தந்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய இயக்குநர்கள் நடித்துள்ளார்கள். அவர்களை இயக்கியது நல்ல அனுபவமாக இருந்தது.
கங்கனாவிற்கு முழு திரைக்கதையும் தெரியும். ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகப்பெரிய படைப்பு கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி” என்று கூறினார்.
“தலைவி” படம் செப்டம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.