சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தி.மு.க! ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர் தானு!!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதிலும் தி.மு.க மட்டுமே 133 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. வரும் மே 7 அன்று, தமிழக ஆளுநர் மாளிகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எளிமையான முறையில் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் வேறு சில முக்கிய அமைச்சர்களும் அன்றே அங்கு பதவியேற்கவிற்கின்றனர்.

தி.மு.க’வின் அமோக வெற்றிக்கும் அதற்கு முக்கிய காரணக்கர்த்தாவான அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தி ஒரு வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், ஆல் இந்தியா பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியாவின் தலைவருமான கலைப்புலி எஸ்.தானு. அவ்வாழ்த்தில் அவர் எழுதியிருப்பதாவது,

“கலைஞர் தந்த பொற்கால ஆட்சியை மீண்டும் தாருங்கள்
கலைப்புலி எஸ்.தாணு அறிக்கை

அரைநூற்றாண்டு பொது வாழ்வில் கலைஞரின் பாடசாலையில் பயின்று சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று கடந்த காலங்களில் கட்சித் தலைமையையோ ஆட்சி தலைமையையோ கேட்டு பெறாமல் கலைஞர் ஆசியுடன் மக்கள் தந்த மாநகர் மேயர், துணை முதல்வர், உள்ளாட்சியில் நல்லாட்சியை தந்து ஏற்ற பொறுப்புகளிலெல்லாம் மிகச் சிறப்பான நிர்வாகம் தந்து, ஒட்டு மொத்த தமிழகத்தின் பாராட்டை பெற்றீர்கள். மீண்டும் ஆட்சியை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக “நமக்கு நாமே”, “ஒன்றிணைவோம் வா” திட்டங்கள் மூலம் நம் தாய் மண்ணில் உங்கள் பாதங்கள் தடம் பதிக்காத இடங்களே இல்லை எனும் அளவில் பயணம் செய்து மக்களின் மனங்களை வசப்படுத்தி அதீத அன்பாய் சாத்தியப்படுத்தி விட்டீர்கள். மாநிலம் தழுவிய கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் மனுக்களை பெற்று அதன் தீர்வுக்காக தனி அமைச்சகமும், உயர் அதிகாரிகளை நியமிக்க இருப்பதை காண உலகமே உங்களை உற்று நோக்கி காத்திருக்கிறது. கலைஞருக்கு பிறகு கழகத்துக்கு தலைமை ஏற்று கட்சியை கட்டமைத்து, ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி பெருத்தொற்று காலத்திலும் மேற்கொண்ட பயணங்களால் தமிழக மக்கள் மகத்தான வெற்றியை தந்திருக்கிறார்கள். கலைஞரைப் போன்று கலைத்துறையிலும் தனிக் கவனம் செலுத்தி அந்தத் துறையை மிகச் சிறப்பாக செயல்பட வழி வகுத்துத் தாருங்கள்.

கூட்டணி அமைப்பதிலும் கட்சித்தலைவர்களை சந்திக்கும் போதும், கருத்து பரிமாற்றங்கள் நிகழும் போதும் கடுஞ்சொற்கள் பயன்படுத்தியதாக யாரிடமிருந்தும் எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே உங்கள் ஆளுமையின் ஆழத்தை மிக அழகாக அற்புதமாக அரங்கேற்றி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை நெடிய பயணத்தில் கண்ட நீங்கள், ஆட்சிப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் துரைச்சார்ந்த நிர்ணயத்துவத்தை பயன்படுத்தி உங்கள் தலைமை சிறக்க கடந்த காலத்தில் நீங்கள் செயல்பட்டதை அறிந்தவர்கள் இன்றும் பாராட்டி மகிழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, மனங்கவரும் வியூகங்கள் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையையும், கூட்டணிக்கு அறுதிபெரும்பான்மையையும் பெற்று தமிழக மக்களின் லட்சிய பிம்பமாக, தமிழக இளைஞர்களின் சுடரொளியாக வெளிச்சம் பாய்ச்சி கலைஞரின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து வருங்கால தலைமுறைக்கான தலைவரென முத்திரை பதிக்க வேண்டுகிறேன்.” என தன்னுடைய வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு.

Leave a Response