நான் பிரமித்து பார்த்த நடிகர் என்றால் அது கார்த்தி தான் – இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்

சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது:

நடிகர் கார்த்தி பேசும்போது,

“இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது.
ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படும்.

ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்கியம். இப்படத்திற்கு வில்லன் சிறப்பாக அமைந்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை லால், கட்டப்பா மாதிரி. எந்த காட்சியாக இருந்தாலும், எந்த பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாக செய்கிறார்.

யோகிபாபுவின் படங்களைப் பார்த்து ரசித்து சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இப்படம் மூலம் முதன்முதலாக பணியாற்றும் போது தான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது.

நெப்போலியன் அவர்கள் நண்பராக தான் இப்படத்தின் பணியாற்றினார். ராஷ்மிகா இதுவரை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படத்தில் கிராமத்து பெண்ணாக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வேலை செய்வது, மாட்டுவண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாக செய்திருக்கிறார்.

ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும், அனைவரின் மனதிலும் பதியவைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைந்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசும்போது

“இப்படத்தில் நான் 5 பாடல்களை எழுதியிருக்கிறேன். ஒரு பாடலுக்கேற்ற சூழலை சொல்லுவதற்கு கைதேர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் மாபெரும் வெற்றியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அனைத்து பாடல்களையும் ஸ்டுடியோவில் தான் இயற்றினேன். ராஷ்மிகா புகைப்படத்தை கொடுத்து இவர்தான் கதாநாயகி என்றதும், ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல’ என்கிற வரி தான் எழுத வந்தது.

பாடல்கள் இணையத்தில் கேட்டுவிட்டு பல பேர் பாடல் வரிகள் குறித்து எனக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திக்கு ‘சிறுத்தை‘ படத்திலிருந்து பாடல்கள் எழுதி கொண்டு வருகிறேன்” என்றார்.

நடிகர் பிரின்ஸ் பேசும்போது,

“ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இயக்குநர் முதல் நாளிலிருந்தே என்மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்” என்றார்.

நடிகர் சென்றாயன் பேசும்போது,

“இப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர். விவேக் மெர்லின் நன்றாக இசையமைத்திருக்கிறார்கள். என்னுடைய 2 வயது பெண் இப்படத்தின் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இப்படத்தில் கடினமான உழைத்தார்கள் உதவி இயக்குநர்கள். இப்படம் பிரமாதமாக வந்திருக்கிறது. ராஷ்மிகா அனைவருடனும் இயல்பாக பழகக் கூடியவர். பெரிய இடத்திற்கு வருவார். ஷோபி எனக்கு என்ன வருமோ அதை வைத்து நடனம் அமைத்தார்” என்று பேசினார்.

நடன இயக்குநர் ஷோபி பேசுகையில்,

“இப்படத்தில் நடித்த பலருக்கும் நடிப்பில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். இப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டும். இதுபோல பல திரைப்படங்கள் வரவேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் விவேக் (மெர்வின்) பேசும்போது

“இரண்டு வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் கண்ணன் எங்களிடம் கதை கூறினார். 2 மணிநேரம் எங்கேயும் நகரவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தோம். ஆனால், இறுதிக் காட்சிகளை அவர் கூறும்போது இருவரும் எழுந்து நின்றுவிட்டோம். இதுதான் சுல்தானின் விளைவு. இப்படம் எங்களுக்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது.

ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது பாடல்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு இயக்குநர், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அனிரூத் மற்றும் சிம்புவும் இப்படத்திற்காக பாடி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று பேசினார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா பேசும்போது,

“கார்த்தி சிறப்பாக நடிப்பார் என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்னும் எனக்கு அறிவுரை தேவைப்படுகிறது.

இயக்குநர் எனக்கு இப்பட கதையை முதல் முதலாக அழகாக கூறியதற்கு நன்றி. இப்படத்தில் என்னை அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இதுபோன்ற பின்னணியில் நான் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசை இப்படம் மூலம் நிறைவேறியது..என்று கூறினார்.

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேசுகையில்,

“எனக்கே மிகவும் படபடப்பாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது.

கார்த்தி சார் நடித்த முதல் படமான ‘பருத்தி வீரன்‘ படம் பார்த்ததும் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு நடிகனா என்று ஆச்சரிய பட்டேன். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். அன்று முதல் அவரது ஒவ்வொரு படத்தையும் ஓடி ஓடி பார்ப்பேன். அப்படி உருவானது தான் சுல்தான். நான் பிரமித்து பார்த்த நடிகர் என்றால் அது கார்த்தி தான். அவரை பல வித பாத்திரங்களில் பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் புது விதமான கார்த்தியை காண்பிக்க விரும்பினேன்” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. ராஷ்மிகா விளையாட்டு பெண்ணாக இருப்பார். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் கதாபாத்திரத்தில் ஒன்றி விடுவார்.

இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் தனிக்கொடி எழுதினார். மற்ற அனைத்து பாடல்களையும் விவேகா தான் எழுதினார். எப்படி வேண்டும் என்று கேட்டாலும் இரவு பகலாக விரும்பியபடி எழுதி கொடுத்தார். விவேக் மெர்வின் சகோதரர்கள் நன்றாக இசையமைத்திருக்கிறார்கள்.

இப்படம் ஒரு அதிரடி படம் என்பதால் சண்டை காட்சிகளை கண்களுக்கு விருந்தாக திலீப் சுப்பராயன் கொடுத்திருக்கிறார்.

நெப்போலியன் கார்த்திக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். சென்றாயன் பேச்சை கேட்கும் போதே அவருடைய நகைச்சுவை திறமை தெரியும். அவருக்கான வசனங்களை துருவி துருவி கேட்டு கொண்டே இருப்பார். என்னுடன் கடினமாக பணியாற்றிய அத்துனை உதவி இயக்குநர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

“2 வருடங்களுக்குப் பிறகு இந்த இடத்தில் விழாவை வைத்திருக்கிறோம். கொரோனாவிற்கு பிறகு விழா வைத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தோடு வைத்திருக்கிறோம்.

இப்படத்திற்கான பட்ஜெட் மிகவும் அதிகமாக இருந்தது. இப்படத்திற்கான கதையை இயக்குநர் இரண்டு படத்திற்கான கதையைக் கூறினார். பாகுபலி அளவிற்கு பிரமாண்ட கதையாக இருந்ததால், இந்த இரண்டு கதைகளையும் பாகுபலி கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம் கூறினோம். அவர் கூறிய ஆலோசனையின்படி இக்கதையை அமைத்தோம். அது எங்களுக்கு மிகுந்த பலமாக இருந்தது.

கொரோனாவிற்கு பிறகு, இந்திய அளவில் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்தது மாஸ்டர் திரைப்படம் தான். திரையரங்கில் வெளியிட்ட அப்படக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நம்பிக்கை தான் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவெடுக்க வைத்தது.

நெப்போலியன், லால், இருக்கிறார்கள். இவர்கள் தவிர மயில்சாமி, மாரிமுத்து போன்ற இன்னும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களிடையே நடக்கக் கூடிய உணர்வுபூர்வமான காட்சி அமைப்பு கண்கலங்க வைக்கும்படியாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு தரமான படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

‘டிரீம் வாரியர்ஸ்’ எப்போதும் தரமான படங்களை கொடுப்பார்கள் என்பதை இப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. எல்லோரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து மகிழுங்கள்.

Leave a Response