இஸ்லாமிய திருமண விழாவில் பாட்டு பாடி அசத்திய அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும்,சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார். அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பார்க்கிறார்கள்.

காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை.

ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடி மக்களை,தொண்டர்களை ரசிக்க வைத்தவர் என்று தெரிந்த இஸ்லாமியர்கள் சிலர் தங்களுக்காக ஒரு பாட்டு பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து இசைக்கலைஞர்கள் இருந்த மேடைக்கு சென்ற அமைச்சர், கலைஞர்களை தன்னுடன் வந்து பாடுமாறு கேட்டுக் கொண்டார்.

முறைப்படி இசை கற்காவிட்டாலும் கேள்வி ஞானத்தால் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்தும் அவரைக் கண்டு தயங்கியபடியே வந்த அவர்கள், இவரோடு போட்டி போட முடியுமா என்ற எண்ணத்தோடு தயங்கினர்.

அவர்களை ஊக்கப்படுத்தி இசையமைக்கச் சொல்லி தன்னோடு சேர்ந்து பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இஸ்லாமியர்களின் விருப்பப்படி ‘எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்…அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ என்ற பாடலைப் பாடினார். 1961இல் வெளியான ‘பாவமன்னிப்பு’ படத்தில் கண்ணதாசன் வரியில், டிஎம் சௌந்தர்ராஜன் குரலில் ஒலித்த இந்தப் பாடலை அமைச்சர் ஜெயக்குமார் பாடியதால் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த இயக்குனர் பாக்யராஜ் அமைச்சரை வெகுவாகப் பாராட்டினார்.

இந்து,கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மத வேறுபாடுகளைக் கடந்து எல்லோரிடமும், எப்போதும் ஒரே மாதிரியாக பழகக்கூடிய அமைச்சர் இவர் என்பதால்தான் மக்கள் விரும்பும் நாயகராக இன்னமும் அதே தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை…

Leave a Response