விவசாயிகளுக்கு குரல் கொடுத்த விஜயதாரணி

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. காலை 9 மணிக்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண்மணி. சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கெடுபிடியாக இருந்தது.

காரிலிருந்து இறங்கிய போது, தலையில் பச்சை கலரில் தலைப்பாகை கட்டி கம்பீரமாக வெளியே வந்தார் காங்கிரஸ் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. பார்த்தவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். வந்தவர் நேரடியாக சட்டமன்றத்திற்குள் சென்றார்.

உள்ளே நுழைந்ததும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆச்சரியமாக பார்த்தனர். கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரது பார்வையும் ஒரே நேரத்தில் விஜயதாரணி பக்கம் கவனம் பெறும் வகையில் இருந்தது. அவர் ஏன் தலைப்பாகையோடு இப்படி வந்திருக்கிறார் என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

கவர்னர் உரை தொடங்குவதற்கு முன்பே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் விஜயதாரணி. அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் தலையில் தலைப்பாகை கட்டி வெளியே வந்து முழக்கமிட்டனர். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக கூறி முழக்கமிட்டார்.

இந்தியாவின் உயிர்நாடியாக இருப்பது விவசாயமும், விவசாயிகளும் தான். அவர்களின் குரலுக்கு செவி சாய்க்காத அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் தலைப்பாகை அணிந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓங்கி ஒலித்த குரலில் பேட்டி கொடுத்தார் விஜயதாரணி. அப்போது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதை வியப்பில் பார்த்தனர். எப்போதுமே அதிரடியாக துணிச்சலோடு விமர்சனங்களுக்கு, அஞ்சாமல் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் விஜயதாரணியின் இந்த செயலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Response