அ.தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட தி.மு.க’வின் மாஜி சட்டசபை வேட்பாளர்!

தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு கிளப்பி வரும் நிலையில் அடுத்து எப்படியும் ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், கைப்பற்ற திமுகவும் கடும் யுக்திகளை முன்னெடுத்து வருகிறது.

செண்டிமெண்ட்டுக்கு பேர் போன அரக்கோணம் தொகுதி இப்போது அதிமுக வசம் உள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.சு.ரவி இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தொடர்கிறார்.

இப்போது மூன்றாம் முறையாக போட்டியிட முயற்சிக்கிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ்குமார் தேர்தலில் போட்டியிட்டு தோற்றபிறகும் திடீரென ஒரு பெட்ரோல் பங்க் முதலாளியாக மாறிப்போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ.ரவியை புத்தாண்டை முன்னிட்டு ஒரு அதிகாலை நேரத்தில் காஞ்சிபுரத்தில் பல ஆயிரம் மதிப்பில் ஆர்டர் கொடுத்து வாங்கிய ஏலக்காய் மாலையுடன் திமுக மாஜி வேட்பாளர் ராஜ்குமார் சந்தித்து ரகசிய டீல் பேசியதாக ஓட்டுநர் மூலமாகவே தகவல் வெளியே கசிய அரக்கோணம் தொகுதி திமுக பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கட்சியின் தீவிர விசுவாசியான மாவட்ட செயலாளரும் இராணிப்பேட்டை எம்.எல்.ஏ.,வுமான காந்திக்கு, இந்த தகவல் போனதா… என்பது இதுவரை தெரியவில்லை.

சிட்டிங் எம்.எல்.ஏ.,வுடன் நடந்த இந்த ரகசிய சந்திப்பால் கடந்த தேர்தலிலேயே ராஜ்குமார் இதே போன்று ஏதோ ஒரு ரகசிய டீல் வைத்துக் கொண்டுதான் ஜெயிக்க வேண்டிய தொகுதியில் தோற்றாரா என்ற சந்தேகம் தொகுதி திமுகவினரிடம் ஏற்பட்டு பரபரப்பான விவாதம் ஆக்கியுள்ளது.

இதற்கிடையில் இந்த முறையும் வேட்பாளர் ரேசில் பவானி வடிவேல், வக்கீல் எழில் இனியன், ராஜ்குமார் என 3 பேர் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response