1975-ம் ஆண்டில் நடந்த சம்பவம் படமாகிறது. கதையின் நாயகனாக சசிக்குமார் நடிக்க, அவரை வைத்து இயக்குவது விருமாண்டி. ஆம் “க/பெ ரணசிங்கம்” புகழ் விருமாண்டி தான் அந்த இயக்குநர்
உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை “க/பெ ரணசிங்கம்” என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான். 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் இயக்குநர் விருமாண்டி.
இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் நடிகர் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘பரதன் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை திங்களன்று நடைபெற்றது.
இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல் எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டி.சிவாநாதீஸ்வரன் எடிட்டிங் பணியை செய்கிறார்.
உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற்குத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம்.
ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.