விரைவில் ரசிகர்களை பயமுறுத்த வருகிறது ரூபம்

எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’. “அறம்” தொடங்கி சமீபத்திய “க/பெ ரணசிங்கம்” வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் இணைகிறது “ரூபம்”. அறிமுக இயக்குநர் தாமரைச்செல்வன் இயக்க, பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே பாணியில் இப்படமும் தயாராகவுள்ளது. த்ரில்லர் படங்கள் என்றாலே தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரதானமாக இருக்க வேண்டும். ‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது.

2021ம் ஆண்டில் ரசிகர்களுக்கு ஒரு பேய் விருந்துக் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்!

Leave a Response