இரவின் நிழல் மூலம் அடுத்த சாதனை படைக்கும் பிரபல இயக்குநர்

செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது,,,,

வணக்கம்,
இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு, தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்… தீபாவளி திரு நாளில், ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, இனிப்புகள், தீபாவளிக்கான சிறு தொகை என்று, இந்த இக்கட்டான நாட்களில், எங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்ற, வெளிச்சமாய் இருந்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும், தீபாவளி நல் வாழ்த்துக்களும்..

இந்த தீபாவளி விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் தமிழ் சினிமாவின் புதிய பாதை இயக்குநர் பார்த்திபன் அவர்கள். விழாவில் கலந்து கொண்டதோடு,எமது மக்களுக்கு புத்தாடைகளும் வழங்கி சிறப்பித்தார்,மேலும் அவர் பேசும் போது, “தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பத்திரிக்கையாளர்களை எப்போதும் நான் பிரஸ் மக்கள் என்று அழைத்ததே இல்லை எப்போதும் பிளஸ் மக்கள் என்றே அழைப்பேன். முப்பது வருடங்களுக்கும் மேல் என் முதல் படம் துவங்கி இப்போதும் அடுத்த படம் வரையிலும்கூட பத்திரிக்கையாளர்களின் கருத்துக்களும், பாராட்டுக்களையும் எப்போதும் எதிர்பார்ப்பவன் நான். வெகுஜன மக்களின் விமர்சனங்களை காட்டிலும் பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருப்பவன் நான். ஏனெனில் பத்திரிக்கையாளர்கள் கொடுக்கும் விமர்சனங்கள் என் அப்பாவும், அம்மாவும் எனக்கு கொடுக்கும் பாராட்டு போன்றது.

எனது அடுத்த படம் முழுமையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம். இப்படத்திற்கு “இரவின் நிழல்” என்று பெயர். இதற்கு முன்பும் நிறைய சிங்கிள் ஷாட் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இப்படத்திற்கான முதலமைச்சர் சந்திப்பு கூட இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதாவது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ரயில் டிக்கெட் துவங்கி அனைத்து செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். அதைப்போல் சினிமாவிலும் இம்மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் எடுக்கும் கலைஞர்களை படம் எடுத்த பின் ஒரு கேடயம் கொடுத்து பாராட்டுவதற்கு பதிலாக எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்கலாம் என்னும் திட்டத்திற்காக முதலமைச்சரை சந்திக்க இருந்தேன். அந்த வேலைகளில் மும்முரமாக இருந்த காரணத்தினாலேயே இந்த சங்க விழாவில் கலந்து கொள்ள சற்று தயங்கினேன். ஆனால் அதையும் மீறி இந்த நிகழ்ச்சியில் எப்படியேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரம் ஒதுக்கி கலந்து கொண்டேன்.

சமீபத்தில் OTP என்னும் ஒரு வெடி பிரபலமாகி வருகிறது. அதாவது திரியைப் பற்ற வைத்தவுடன் நம் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும் அந்த அளவிற்கு இன்று டிஜிட்டல் மயம் எங்கும் எதிலும் அதிகரித்துவிட்டது. இப்படியான வேளையில் தீபாவளி போன்ற பண்டிகையிலாவது குடும்பமாக இப்படி ஒரு சங்கம் இருப்பின் சங்க உறுப்பினர்களோடு என இணைந்து பண்டிகைகளை கொண்டாடுவது தான் மகிழ்ச்சி. அப்படி ஒன்றிணைந்து இருக்கும் இந்த சங்கத்தின் விழாவில் நானும் ஒருவனாக இருப்பதில் மேலும் மகிழ்ச்சி.

உறுப்பினர்களுக்கு பெரிதாக நான் ஏதும் செய்யவில்லை என்னால் முடிந்த உதவியை ஒரு மனிதனாக சக மனிதனுக்கு செய்து இருக்கிறேன் அவ்வளவே. என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் வாடகை வீட்டில் இருக்கும் ஒரு இயக்குனர் தான். அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை காரணம் நான் இப்போதும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். இவர் ஒரு பெரிய ஓய்வு பெற்ற இயக்குனர் இந்த தெருவே அவருடையதுதான் நிறைய பங்களாக்கள் வாங்கிப் போட்டிருக்கிறார் என்னும் பெயரை விட இப்போதும் அவர் படம் செய்து கொண்டிருக்கிறார் என்னும் வார்த்தைதான் எனக்கு வேண்டும். இப்போதும் நான் தடையின்றி படம் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அது பத்திரிக்கையாளர்கள் நீங்கள் கொடுக்கும் உற்சாகமும், உத்வேகமும் மட்டுமே. அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என சங்க உறுப்பினர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறி பரிசுப் பொருட்களை வழங்கினார் இயக்குனர் மற்றும் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள்.

மேலும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக பாராட்டு மடல் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Leave a Response