பெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ஆக்கப் பிறந்தவளே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது நாம் உருவாவதற்கு காரணமான பெண்களைக் கொண்டாடுவதற்கும், நம் வாழ்வில் அவர்கள் ஒரு அச்சாணியாக இருப்பதைப் பாராட்டுவதற்குமான ஒரு பாடல் ஆகும்.

இந்தப் பாடலின் மையக் கருத்து இந்த உலகிற்கு உயிரை கொண்டுவரும் ஒரு பெண்ணுக்கும் இந்த உலகை ஆளும் உரிமை இல்லையா? எனக் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது.

இந்தப் பாடல் உருவாவதற்கான காரணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் “உலகம் பெண்களால் இயக்கப்படுவதை காண விரும்புகிறேன். இன்று நான் இந்த அளவில் இருப்பது, என்னுடைய பயணம் என எல்லாமும் எனக்கு ஆதரவளித்த பெண்களால் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த பாடல் பெண்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய மேலான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் .

இந்தப் பாடலை எனது மகள் லீலாவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் இந்த பாடலின் உருவாக்கத்தில் அவள்தான் எனக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தாள். என் மகள் லீலாவுக்கு நன்றி” எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் .

கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த பாடல் தற்போது அனைத்து ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஷான் ரோல்டன் தற்போது பல்வேறு ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க ஒவ்வொரு மாதமும் ஒரு பாடலை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response