கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை சுமார் காலை 8 மணியளவில் காலமானார். அவருடை பிறந்த தினமான இன்று அவர் காலமானார் என்ற செய்தி திமுகவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதல் அரசியல் பிரமுகர், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆவார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, அதற்கு அடுத்த இரு நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் ஜெ. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும், அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரேலா மருத்துவமனைக்கு விரைந்து சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை காலமானார். அவரது உடல், கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Leave a Response