போலீசாக ஆசைப்பட்டு முடியாமல்போய் துப்பறிவாளனாக வருகிறார் நடிகர் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரு வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் பேரரசனாக உலாவரும் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

“பெல்பாட்டம்” முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய், தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு பல எதிர்பராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்தேறுவதில்லை. அவர் சந்திக்கும் விவகாரமான, வித்தியாசமான மனிதர்கள், எல்லாம் அந்த வழக்கை விசாரிப்பதை பன்மடங்கு கடினமாக்குகிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெகு நாகரீகமான படங்கள் மூலம் ஒரு தனிச்சிறப்பான இடத்தை கிருஷ்ணா பெற்றிருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சந்தோஷ் சிவன் இயக்கத்தில் “டெரரிஸ்ட்” படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, நாயகனாக காமெடி ஹாராரன “யாமிருக்க பயமேன்” படத்தில் கலக்கி, சொல்லப்படாத மனிதர்களின் கதையை சொல்லிய “கழுகு” என அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட, படங்களில் நடித்து, தொடர் வெற்றிகள் தந்து, நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். தற்போது முற்றிலும் மாறுபட்ட, ரெட்ரோ கால துப்பறிவாளனாக “பெல்பாட்டம்” படத்தில் நடிக்கிறார். “குற்றம் 23, மகாமுனி” படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற மஹிமா நம்பியார் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தனது தனிச்சிறப்பான பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசை மூலமும் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். “வழக்கு எண் 18/9, தனி ஒருவன், 1945, டோரா, கழுகு 2” புகழ் கோபி கிருஷ்ணா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

‘NH Hari Silver Screens நிறுவனம்’ சார்பில் H. சார்லஸ் இம்மானுவேல் “பெல் பாட்டம்” படத்தை தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தீதும் நன்றும்” விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சத்யசிவா தற்போது நடிகர் ராணாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள “1945” படமும் பெரும் எதிர்பார்ப்பிர்க் கிடையில் விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Response