காட்டு மிருகங்களின் வாழ்க்கையை சொல்லும் கா

“பொட்டு” படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “கா” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.
அம்ரிஷ் இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் நாஞ்சில்.

விறு விறுப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் நம்மிடம் பேசியதாவது,

“முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்.

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில், இதில் கண்டு ரசிக்கலாம்” என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.

Leave a Response