நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு..!

‘என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் நான் வாங்கும் சம்பளம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அதை நம்பாதீர்கள்’என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறார் இன்றைய தமிழின் முன்னணி காமெடியனான யோகி பாபு.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யோகி பாபு இல்லாத முக்கியப் படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து வரும் யோகி படத்துக்கு நாள் சம்பளமாக ரூ.10 முதல் 15 லட்சம் வரை வாங்குவதாக ஊதிப் பெருக்கப்பட்டது. இச்செய்தியை முற்றிலுமாக மறுக்கிறார் யோகிபாபு.

நேற்று மாலை நடந்த, அவர் நாயகனாக நடிக்கும் ‘தர்மபிரபு’ விழாவில் பேசியவர்,” நான் ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக வரும் செய்திகள் அபாண்டப் பொய்கள். ஆயிரம், ரெண்டாயிரம் என்று சம்பளம் வாங்கி மெல்ல மெல்ல வளர்ந்து வந்தவன் நான். தயாரிப்பாளர்களின் கஷ்டம் என்ன என்பதும் எனக்குத் தெரியும்.

உண்மையில் பல தயாரிப்பாளர்களிடமிருந்து பேசிய தொகையே வருவதில்லை. பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு இன்றுவரை நான் குறைந்த சம்பளத்தில்தான் நடித்துக்கொடுத்து வருகிறேன். நான் அவ்வளவு பெரிய தொகை வாங்குவதாகப் பரப்புபவர்கள் என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள். என் சம்பளத்தைத் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும் என்று நினைத்தால் நேராக என்னைத் தேடி வந்து கேளுங்கள். மறைக்காமல் சொல்கிறேன்’ என்கிறார் யோகி பாபு.

Leave a Response