கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் “மயூரன்“..!

PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன்,  M .P.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “  மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ),  அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் )   மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு  – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் . கதை,  திரைக்கதை, வசனம், இயக்கம்  –  நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா,பிதாமகன்  போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் )

படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது.

சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான  அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு,  குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும் படம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

Leave a Response