கே.ஜி.பி பிலிம்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக கே.ஜி.பாண்டியன் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு ‘ஆப்பிள் பெண்ணே’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா, கிளாமர் வேடத்தில் நடிக்கிறார். தம்பி ராமைய்யா இதுவரை ஏற்றிராத வித்தியாசமான ஏட்டு வேடத்தில் நடிக்கிறார். பன்னீர்புஷ்பங்கள் சுரேஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். கே.ஜி.பாண்டியன், ஆர்.தெய்வேந்திரன், திருமுருகன், நித்யா, சுசித்ரா, சுரேஷ், இக்பால் மற்றும் ரங்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரபாகர், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுத மணிசர்மா இசை அமைக்கிறார். கலை – ராஜீவன், எடிட்டிங் – ஆண்டனி. பிரபு, கார்த்திக் நடித்த ‘தைபொறந்தாச்சு’ பிரபு நடித்த ‘சூப்பர் குடும்பம்’ விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’ போன்ற படங்களை இயக்கிய ஆர்.கே.கலைமணி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
‘ஆப்பிள் பெண்ணே’ படத்தைப் பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணி கூறும்போது, “இன்றைய தலைமுறையினருக்கு அம்மா, அப்பாவைப் பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. பெற்றோர்களின் பாசம் கூட அவர்களுக்கு புரியாமல் போய் விடுகிறது. அம்மா, அப்பாவின் அணுகுமுறையை தவறாகப் புரிந்து கொண்டு ஓடிப்போகிற இன்றைய தலைமுறையினரைப் பற்றிய படமே ‘ஆப்பிள் பெண்ணே’.
இப்படத்திற்காக ரோஜா நடத்தும் ஓட்டல் ஒன்றை சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் குற்றாலத்தில் அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். அம்மா, மகள் பாசத்தை மையப்படுத்தி காதலை இதில் புது மாதிரியான விதத்தில் சொல்லி இருக்கிறோம். சாலக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், ”என்றார்.
இந்த படத்தின் கதாநாயகன் வத்சன் நடிகர் இளையதளபதி விஜய்க்கு பழக்கமானவர் என்பதால் தனக்கு படம் ஒப்பந்தமானவுடன் விஜயிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்ற பிறகே நடிக்க சென்றார்.