‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்கும் “ஷிரின் காஞ்ச்வாலா”..!

மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்திய ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறும்போது, “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிகவும் நட்புடன் பழகினர்.
நான் இந்த படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர். ரியோ ராஜ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளை கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
ரியோ ராஜ் மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில பிரபலமான YouTube நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஷபீர் (இசை), யு.கே.செந்தில் குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப் குமார் (சண்டைப்பயிற்சி), தினேஷ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.
படத்தின் 80% பகுதிகள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்தை கொண்டுள்ளது, இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என ஒட்டுமொத்த குழுவினரும் நம்புகிறார்கள்.

Leave a Response