ராகுல் பிரதமர், ஸ்டாலின் முதல்வர் : இதற்காகத்தான் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர் – ப சிதம்பரம்..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. சிவகங்கை தொகுதியை தனது மகனுக்குத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் ப சிதம்பரம் , ஆனால் காங்கிரஸ் தலைமை உள்ளூர் நிர்வாகிகளிடம் சிதம்பரம் குடும்பத்திற்கு இருக்கும் அதிருப்தியைக் கணக்கில் கொண்டு சீட் கொடுக்க யோசித்தது. ஆனால் ப சிதம்பரம் பதவி விலகுவேன் என மிரட்டி தனது மகனுக்காக சீட் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு தனது மகன் வெல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமாகக் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் ஒருப்பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று பேசினார். அப்போது ‘வரும் தேர்தலில் ராகுல் பிரதமரான பின்பு தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அப்போது ஸ்டாலின் முதல்வராவார். இதற்காகத்தான் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் மோடி தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்த ப சிதம்பரம் ‘ஆர்.எஸ்.எஸ். காரரான மோடி சொன்னது எதையும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் செய்யமுடியாததை என்றுமே சொன்னதில்லை’ எனத் தெரிவித்தார்.

Leave a Response