உதவாக்கரை பட்ஜெட் : தமிழக பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்..!

ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2019- 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். டாஸ்மாக் கடைகளை மூடியது, மெட்ரோ ரயில் தொடக்கம், தமிழ் மொழி வளர்ச்சி, நீர்வள ஆதாரம் மற்றும் பாசனத்துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் திட்டங்களை அறிவித்தார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்தார்.

இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வருவாய், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

சங்கீத வித்வான் போல சொன்னதையே நிதியமைச்சர் திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருந்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நெல் கொள்முதலுக்கான விலை, கரும்புக்கான ஆதார விலையை அரசு உயர்த்தவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Response