‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விமர்சனம்..!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் `வந்தா ராஜாவாதான் வருவேன்’

இருபது வருடங்களுக்கு முன், அத்தையின் காதல் திருமணத்தால் உடைந்து சிதறுகிறது குடும்பம். அதை பாசம் எனும் பசையால் மீண்டும் ஒட்டவைக்க முயலும் மருமகனின் பயணமே, `வந்தா ராஜாவாதான் வருவேன்’.

ஆதி (எ) ராஜாவாக எஸ்.டி.ஆர். டைமிங்கில் கலக்கும் காமெடிக் காட்சிகளாகட்டும், அடியாட்களை பறக்கவிடும் சண்டைக் காட்சிகளாகட்டும், கண்களை ஈரமாக்கும் இறுதிக்காட்சியாகட்டும்… தான் ஒரு நல்ல பர்ஃபாமர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். சிம்பு என்றாலே எனர்ஜிதான். ஆனால், உடலில் எடை ஏறியதிலிருந்து எனர்ஜி குறைந்துவிட்டது. திரையுலகில் ஒரு நடினாக, மீண்டும் ராஜாவாகத்தான் வந்திருக்கிறார் சிம்பு.

அத்தை நந்தினியாக ரம்யாகிருஷ்ணன். நீலாம்பரி, சிவகாமிதேவி எல்லாம் கண் முன்னால் வந்துபோகிறார்கள். பாத்திர வடிவமைப்பிலும் நடிப்பிலும் பெரிய வித்தியாசம் இல்லை. `ஹீரோயின்’ மேகா ஆகாஷ். அவரே தமிழில் டப்பிங் பேசியிருப்பது ஆறுதல். கேத்ரின் தெரஸா எனர்ஜியாக இருக்கிறார். பிரபு, பிரபுவாகவே வந்துபோகிறார். யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், `நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் சுந்தர்.சி படங்களின் ஆஸ்தான நடிகர்கள். படத்திற்கேற்பச் சிறப்பாய் நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் யோகிபாபு சிறப்பான, தரமான சம்பவம் ஒன்றைச் செய்திருக்கிறார்! ஸ்வீட் சாப்பிடுங்க ப்ரோ…

`அத்தரிண்டிகி தாரேதி’யின் ப்ளூப்ரின்டை வைத்துக்கொண்டு மில்லி மீட்டர் மாறாமல் வீடாகக் கட்டிமுடித்து, வேறு கலரில் பெயின்ட் அடித்துக்கொடுத்திருக்கிறார்கள். திரைக்கதையில் ஆரம்பித்து கேமரா கோணங்கள் வரை பெரிதாய் எந்த மாற்றமும் செய்யவில்லை. குளோராஃபார்ம் அடித்து மயக்கமடையச் செய்வது, தலையில் அடிபட்டு அம்னிசியாவில் வீழ்வது, வாய்க்கால் வரப்புகளில் டாடா சுமோக்கள் பறப்பது, கிராமத்து மக்கள் என்றதும் அரிவாளும் கையுமாகவே ஊருக்குள் சுற்றுவதென சுந்தர்.சியின் உலக நியதிகள் அனைத்தும் படத்தில் `உள்ளேன் ஐயா’ சொல்கிறது. ஆரம்பத்தில் `காமாசோமா’வென நகரும் திரைக்கதை, சடாரென `காரசாரமாய்’ மாறுகிறது.

பிறகு மீண்டும் காமாசோமாவாகி, மீண்டும் காரசாரமாகிறது. நகைச்சுவைக் காட்சிகள் `நறுக்’. மற்ற காட்சிகளை ஒட்டி நறுக்கியிருக்கலாம். ஃப்ளாஷ்பேக் காட்சிகள்தான் மொத்த படத்துக்குமான எமோஷன் எனும்போது, அதை இன்னும் கனமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். பாடல்கள் வேறு அடிக்கடி குறுக்கமறுக்க பாய்ந்து வெறுப்பேத்துகிறது. இப்போது திரையரங்குகளில் `தம்’ அடிக்க முடியாது என்றாலும், பாடல்கள் வரும்போது பலர் எழுந்து கிளம்பிவிடுகிறார்கள். பாவத்த! சுந்தர்.சி – சிம்பு காம்பினேஷன்தான். ஆனாலும், இதுவொரு ஃபேமிலி டிராமா படம் என்பதால் கிடைத்த கேப்களில் மட்டுமே சிலபல `கில்மா’ சமாசாரங்களைச் செருகியிருக்கிறார் சுந்தர்.சி.

Leave a Response