சிம்பு தீவிர ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா..!

‘பிக்பாஸ் சீசன் 2′ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் புதுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் அவர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக் காமெடி படமான இந்தப் படத்துக்கு ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

சிம்புவின் ஒரு வெற்றிப் படத்தின் புகழ்பெற்ற பாடலில் இருந்து பிரபலமான ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் ஹீரோ மகத். அதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் சிம்புவின் தீவிரமான ரசிகராக நடிக்கிறாராம் மகத்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரபு ராம் சி பேசும்போது, “மகத் ஒரு வட சென்னை இளைஞராக, சிம்புவின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

சிம்பு ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா? என்று கேட்டபோது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்” என்றார்.

தரண் இசையமைத்துள்ள இந்த படத்தை வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Leave a Response