பெரியாருக்கே சாதி அடையாளமா : தமிழக அரசின் அடாத செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

தமிழக அரசின் அடாத செயலுக்கு மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.

குரூப் 2 தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம் என குறிப்பிட்டிருந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதிப்பெருமை பேசக்கூடாது என்ற பெரியாருக்கே சாதியா? என்றும், இவர்கள் இவ்வளவு சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்றும் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

குரூப் தேர்வு 2 வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியர் யார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு 4 ஆப்ஷன்கள் விடைகளாக கொடுக்கப்பட்டிருந்தன. அதில் முதல் விடை தவறுதலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இது பல்வேறு வகையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மாபெரும் பிழைக்கு ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார். அதோடு அடாத செயலுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்வியைத் தயாரித்தவர், சரிபார்த்தவர், மேற்பார்வை செய்த ஆணையத்தின் அதிகாரம் படைத்தவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரியுமா, தமிழ்நாடு தெரியுமா எனத் தெரியவில்லை.

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், ‘இ’ என்று பிழையாகப் போட்டுள்ளார்கள். கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச் சொன்னால், பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத்தானே செய்வார்கள்!

இன்றிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1928-ம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் பெரியார். யாரும் சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவர் அவர். சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர் அவர். எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர் அவர்.

அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்”

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response