தோல்வியை தழுவி இருந்தால் என்னுடைய மரணம் தான் நிகழ்ந்து இருக்கும்-ஸ்டாலின் கண்ணீர்..!

திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்தும், மெரினா பிரச்சனை குறித்தும் மிகவும் உருக்கமாக திமுக செயற்குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்தும், மெரினா பிரச்சனை குறித்தும் மிகவும் உருக்கமாக திமுக செயற்குழு கூட்டத்தில் பேசி உள்ளார். அவரது பேச்சு கேட்டு திமுக உறுப்பினர்கள் கண்ணீர் விட்டனர் .

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதில் பேசிய ஸ்டாலின், தலைவர் இல்லாமல் நிகழ்ச்சி நடப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. திமுகவினர் தலைவரை இழந்து இருக்கிறார்கள். நான் தலைவரை மட்டுமில்லை, தந்தையையும் இழந்து உள்ளேன். கருணாநிதியின் உடல் நிலை நலிவடைந்து இருந்த போது, நான் செயல்தலைவராக பொறுப்பேற்றேன்.

செயல்தலைவராக பொறுப்பேற்ற பின் எல்லா உறுப்பினர்களையும் சந்தித்து பேசினேன். விரைவில் திமுக ஆட்சியை கொண்டு வர கூட்டம் நடத்தினேன். தலைவர் உயிரோடு இருக்கும்போதே திமுக ஆட்சியை கொண்டு வர நினைத்தேன். ஆனால், அதை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.

தலைவர் கருணாநிதி, தன்னுடைய அண்ணன் அண்ணாவின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவருடைய ஆசை. மருத்துவர்கள் கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று கூறிய போது, நாங்கள் கண்ணீர் மல்க பேசிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தலைவரின் ஆசையை நிறைவேற்ற, அரசிடம் பேசுகிறோம். ஆனால் அரசு எங்களிடம் எதிர்மறையான பதிலை அனுப்பியது.

அதன்பின் முதல்வரை அதுகுறித்து விவாதிக்க சென்றோம். ஆனால், என்னை திமுக உறுப்பினர்கள் வர கூடாது என்று கூறினார்கள். ஆனால் நான், எனக்கு மானம் போனால் கூட பிரச்சனை இல்லை. நான் முதல்வரை சந்தித்து பேசுவேன். நான் கருணாநிதிக்காக யாரையும் சந்திக்க, எதையும் இழக்க தயார். வெட்கத்தை விட்டு சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கருணாநிதிக்கு இடம் கேட்டேன். அதனால் முதல்வரை சந்திக்க சென்றோம்.

ஆனால், தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. சில நிமிடத்தில் தலைவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது. உடனே அரசு, எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டது. எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. உடனே வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றம் போகலாம் என்றார். இரவே நீதிமன்ற படியேறினோம்.

அதன்பின் மறுநாள் வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தது. மெரினாவில் தலைவரை அடக்கம் செய்யலாம் என்றார்கள். இதற்கு முழுக்க முழுக்க வழக்கறிஞர் குழுதான் காரணம். அந்த குழுதான் இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்தது. அந்த மோசமான நாளில் கூட, அந்த செய்தி கொஞ்சம் மகிழ்ச்சி அளித்தது .

தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருக்காவிட்டால், கலைஞர் பக்கத்தில் என்னை புதைத்திருக்கும் சூழல் வந்திருக்கும். அந்த சூழ்நிலை எனக்கு வரவில்லை. திமுகவிற்கு அவ்வளவு பெரிய சிக்கல் அன்று வந்தது. அன்று மட்டும் தோல்வியை தழுவி இருந்தால் என்னுடைய மரணம்தான் நிகழ்ந்து இருக்கும் என்று உருக்கமாக கண்ணீர் மல்க பேசினார்.

Leave a Response