தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது-ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் வருமான வரிச்சோதனை குறித்து புகார் அளித்தார். சமீபத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் பேசியதாவது,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகனின் மாமனார் மற்றும் அவரது உறவினர்களுக்கு நெடுஞ்சாலை பணியில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. செய்யாதுரை நிறுவனத்தில் எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தி பார்ட்னர். சமீபத்திய ரெய்டில் 189 கோடி ரூபாய், 100 கிலோ தங்கம் சிக்கியது. சென்னை அரசு அலுவலகத்தில் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைவசம் தான் 7 ஆண்டுகளாக நெடுஞ்சாலை துறை உள்ளது. அவர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். முதல்வர் பழனிசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறவினருக்கு ரூ. 3120 கோடி ஒப்பந்தம் வழங்கியுள்ளார்.

மத்திய அரசு நிதி மூலம் நடக்கும் திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது. சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என கவர்னரிடம் வலியுறுத்தினோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

நடவடிக்கை எடுக்க தவறினால், நீதிமன்றத்தை நாடுவோம். எனது புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மற்றும் உள்துறைக்கு அனுப்பி வைக்கிறேன் என கவர்னர் உறுதி அளித்தார். இவ்வாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response